புது தில்லி: வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியன்று தில்லி ஜாமியா நகரில் போராட்டங்கள் நடந்தது.அப்போது அரசு பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் , ' தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பாஜக பேருந்துகளை எரிக்கிறது. எந்த விதமான வன்முறையையும் ஆம் ஆத்மி எதிர்க்கிறது. காவல்துறை பாதுகாப்பபுடன் பேருந்துகள் எரிக்கப்படுவதை நீங்களே பாருங்கள்' என்று கூறி விடியோ ஒன்றையும் இணைத்திருந்தார். அது பலராலும் அதிகமான அளவில் பகிரப்பட்டது.
இந்நிலையில் வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி தில்லி துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா மீது கிரிமினல் வழக்குப் பதியக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவத்சவா என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 'மணீஷ் சிஸோடியா தனது பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான காரியத்தின் மூலம் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தவறான தகவல்களை பரப்பியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504 மற்றும் 505-ன் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கானது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.