பெங்களூரு: தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தெரிவித்தார்.
பெங்களூரு, டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் நவ. 27- ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக முதல்வரின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ், அன்றிரவு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக சதாசிவ நகர் காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சி என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை அவர் வீடு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் என்.ஆர்.சந்தோஷ் கூறியது: எனது உறவினரின் திருமணம் இருந்தது. அந்தத் திருமணத்தில் எடுத்துகொண்ட உணவால் அஜீரணம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அஜீரணத்துக்குப் பதிலாக, தூக்க மாத்திரையை எடுத்துவிட்டேன். அதிக அளவில் மாத்திரை உட்கொண்டதால், மயங்கிவிட்டேன். இதனால் வருத்தப்பட்ட எனது மனைவி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமாகிவிட்டது.
தவறுதலாக தூக்க மாத்திரையை எடுத்துகொண்டேனே தவிர, அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனக்கு சரியாக தூக்கம் வராதபோது தூக்க மாத்திரையை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அரை மாத்திரைக்குப் பதிலாக அன்று முழு மாத்திரையையும் எடுத்துகொண்டேன்.
அரசியல் அழுத்தம் இல்லாத நாள்கள் இல்லை. அதற்காக மாத்திரை உட்கொள்ளும் ஆள் நானில்லை. மன அழுத்தம் எனக்கில்லை. மன உறுதி அதிகம் கொண்டவன் நான் என்றார்.