பெங்களூரு: கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளும் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
கரோனா வழிகாட்டுதல் நெறிகளுடன் பல், ஆயுஷ், துணை மருத்துவம், நர்சிங் மற்றும் மருந்தியல் கல்லூரிகள் இன்று முதல் வழக்கமான வகுப்புகளைத் தொடங்கின.
கர்நாடக சுகாதார மற்றும் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் டிசம்பர் 1 முதல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பட்டம், டிப்ளமோ மற்றும் பொறியியல் கல்லூரிகள் நவம்பர் 17 முதல் வழக்கமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தகவலின்படி, மருத்துவக் கல்லூரிகளில் முகக்கவசம், கை சுத்தத் திரவ மருந்துகள் பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா எதிர்மறை ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.