தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கான உரிமையை மத்திய அரசு வழங்கவேண்டும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விவசாயிகளை மத்திய அரசு தவறாக நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில் இதுதொடர்பாக கருத்துப் பதிவிட்டுள்ள அவர், “விவசாயிகளின் கடின உழைப்பிற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். லத்தி குச்சிகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் மூலம் விவசாயிகளை தவறாக நடத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,“விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமைகளை வழங்குவதே நாம் பட்ட கடனை ஈடுகட்டும். மத்திய அரசு விழித்து விவசாயிகளுக்கான உரிமையை உறுதி செய்யவேண்டும்” என ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.