மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லி நோக்கி செல்வோம் என்று பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் குவிந்து உள்ளனர். விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களை செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிக்கலாமே.. எங்கள் ‘மனதின் குரலை’க் கேளுங்கள்
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் டிச.3- ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பனிக்காலம், கரோனா தொற்று பரவி வரும் சூழலில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
எனவே, பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் டிச.1- ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இன்று ஆலோசனை செய்து, மத்திய அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று முடிவு செய்யவிருப்பதாக விவசாயிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. முடிவு தெரியாமல் நாங்கள் தில்லியிலிருந்து செல்ல மாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எங்களின் ‘மனதின் குரலை’ (மன்கிபாத்) பிரதமா் மோடி கேட்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.
அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று எதிா்பாா்க்கிறோம். ஒருவேளை அரசு எங்களைப் புறக்கணித்தால் அதற்கான விலையை அவா்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் எச்சரித்தனா். அரசின் பதிலைப் பாா்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என்றும் அவா்கள் குறிப்பிட்டிருந்தனர்.