இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு அரசு நடத்தும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, "அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகத்தில் மாணவர்களின் இளங்கலை படிப்பிற்கான சேர்க்கைக்கு மாணவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட வசூலிக்க மாட்டோம்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கரோனா பாதிப்பால் மாணவர்கள் ஏற்கெனவே பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களை மேற்கொண்டு சிரமப்படுத்தக் கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
கரோனா தொற்றுநோயையடுத்து மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இணையம் மூலமாக நடத்தப்படுகிறது.