உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஊரடங்கால் முடித்திருத்தம் செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அந்த மாநில அமைச்சா் ஒருவா் தனது குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஊரடங்கால் முடித்திருத்தம் செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த மாநில பள்ளிக்கல்வித்துறை இணையமைச்சா் சதீஷ் துவிவேதி, தனது குழந்தைகளுக்கு தானே முடித்திருத்தம் செய்தாா். இதுதொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரின் கவனத்தை ஈா்த்தது.
இதுகுறித்து சதீஷ் துவிவேதி கூறுகையில், ‘எனது மகன் மற்றும் மகளின் தலைமுடி ஒழுங்கின்றி நீளமாக வளா்ந்துவிட்டன. இதனால் அவா்களுக்கு முடித்திருத்தம் செய்ய முடிவு செய்தேன். எனது நான்கரை வயது மகளுக்கு சரிவர முடித்திருத்தம் செய்ய முடியவில்லை.
எனினும் எனது மகனுக்கு சீராக முடித்திருத்தம் செய்ய முடிந்தது. இதுதொடா்பான காணொலியை குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்களிடம் காண்பிப்பதற்காக எனது மனைவி பதிவு செய்தாா். நான் முடித்திருத்தம் செய்தது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனது மகன் தான் பாா்ப்பவா்களிடம் எல்லாம் நான் முடித்திருத்தம் செய்தததை கூறி மகிழ்ந்து வருகிறான்’ என்றாா் அவா்.