நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு பெறுவதற்காக அதிருப்தி எம்எல்ஏவிடம் பேரம் பேசியது தொடர்பான வழக்கில், ஆட்சியாளர்கள் தம்மை நசுக்கப் பார்ப்பதாக உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நமது நாட்டில் நீதித் துறை சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்களை தண்டிக்கவும், நிரபராதிகளைப் பாதுகாப்பதும் சட்டத்தின் வேலை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்த சட்டத்தைக் கொண்டு என்னை தங்கள் காலடியில் நசுக்கப் பார்க்கிறார்கள்.
அதற்காக, நீதித் துறைக்கு தேவையில்லாத அழுத்தத்தை அவர்கள் கொடுக்கின்றனர். நான் இந்த நாட்டின் பாதுகாப்புக்கோ, சட்டம் - ஒழுங்குக்கோ எந்த அச்சுறுத்தலையும் தரப் போவதில்லை. இருந்தாலும், எனது வழக்கை விசாரிப்பதற்காக அக். 1-ஆம் தேதியை உயர்நீதிமன்றம் முடிவு செய்தால், அதனை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் அவர்களால் எதனால் பொறுமை காக்க முடியவில்லை என்று தெரியவில்லை என்றார் அவர்.