ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே இருக்கும் கண்டிபோச்சம்மா கோயில் பகுதியிலிருந்து கோதாவரி ஆற்றின் ஓரம் இருக்கும் பாபிகொண்டலு மலைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம், பயணிகள், ஊழியர்கள் உள்பட 60 பேர் படகில் சுற்றுலா சென்றனர்.
படகில் ஏற்பட்ட ஓட்டை, கனமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் படகு நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 60 பேரும் தண்ணீரில் விழுந்தனர்.
விபத்து நேரிட்டபோது படகில் 27 பேருக்கு மட்டுமே தேவையான உயிர் காக்கும் கவச உடைகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி 27 பயணிகள் கரை சேர்வதற்காக ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதில் முதல்கட்டமாக 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், மாயமான 25 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேலும் 12 பேரின் உடல்கள் செவ்வாய்கிழமை மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.