தலையங்கம்

விபத்து வழங்கும் பாடம்! - பாலசோர் ரயில் விபத்து குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 இந்த நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய ரயில் விபத்து ஏற்படுத்தி இருக்கும் அதிர்ச்சியில் இருந்து உலகம் இன்னும் மீண்டபாடில்லை. மீண்டும் ரயில்கள் அந்தத் தடத்தில் இயங்கத் தொடங்கிவிட்டன என்றாலும், தடம் புரண்ட பல குடும்பங்களின் வாழ்க்கை முழுமையாக சீராக வழியில்லை என்பதை நினைக்கும்போது துக்கம் மேலிடுகிறது.
 கண்ணிமைக்கும் நேரத்தில் கோரமான அந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று வெவ்வேறு ரயில்கள் விபத்தில் சிக்கின. ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் நடந்த அந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில், முதலாவது பிரதான தடத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலுக்கு வழி விடுவதற்காக, சரக்கு ரயில் ஒன்று, பிரதான பாதையிலிருந்து பிரிந்து செல்லும் "லூப் லைன்' எனப்படும் கூடுதல் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிக்னல் கோளாறா அல்லது "லூப் லைன்' பிரிக்கப்பட்டது சரி செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட தவறா என்று தெரியவில்லை, பிரதான பாதையில் சென்று கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் லூப் லைனில் நுழைந்து, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது.
 மோதியது என்பதைவிட அந்த சரக்கு ரயிலின் என்ஜின் மீது ஏறியது என்றுதான் சொல்ல வேண்டும். கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு, இரண்டாவது பிரதான தண்டவாளத் தடத்தில் விழுந்து சிதறின. எதிர் திசையில் ஹெளரா நோக்கி வந்து கொண்டிருந்த பெங்களுரூ - ஹெளரா அதிவிரைவு ரயில் அந்தப் பெட்டிகளின் மீது மோதி அதன் பெட்டிகளும் தரம்புரண்டு சிதறின.
 மொத்தத்தில் சில நொடிகளில் மிகக் கொடூரமான விபத்து அரங்கேறி பல உயிர்களைப் பலி வாங்கிவிட்டது.
 இதற்கு முன்னர் இந்தியா எத்தனையோ ரயில் விபத்துகளை சந்திக்காமல் இல்லை. பிகார் பாக்மதி ஆற்றில் 1981 ஜூன் மாதம் அடைமழை காரணமாக நடந்த விபத்தில் 750-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 1995 ஆகஸ்ட் மாதம் ஃபிரோசாபாத் அருகே நடந்த விபத்தில் 305 பேர் பலியானார்கள்; 1999 ஆகஸ்டில் மேற்கு வங்கம் வடக்கு பினாஜ்பூரில் நடந்த விபத்து 287 பேரின் உயிருக்கு முற்றுப்புள்ளி வைத்தது - இப்படி ரயில் விபத்துகள் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு விபத்தும் தவிர்த்திருக்கக் கூடியது என்று சொன்னாலும், அவற்றைத் தடுக்க முடியாமல் போனது என்பதுதான் உண்மை.
 சிக்னல் பிரச்னையோ, தண்டவாளம் "லூப் லைன்' நோக்கி திருப்பப்பட்டது சரி செய்யப்படாதது காரணமோ எதுவாக இருந்தாலும் ஒரு ஐயப்பாடு விடை காண முடியாமல் தொடர்கிறது. கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் எதிர் திசையில் மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த பெங்களுரூ - ஹெளரா ரயிலை எச்சரிக்க முடியாமல் போனது ஏன் என்பதுதான் அந்தக் கேள்வி.
 மூன்று வெவ்வேறு விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் கடந்த 15 ஆண்டுகளில் முயற்சி செய்திருக்கிறது. அவை எதுவுமே திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஓட்டுநர்கள் அதிவேகமாக இயக்கினாலோ, சிக்னல்களை புறக்கணித்தாலோ, வண்டியை நிறுத்தும் உபகரணம் மேல்மட்டக் குழுவின் பரிந்துரையால் கைவிடப்பட்டது. நேரடி மோதலைத் தவிர்க்க இணைக்கப்பட்ட கருவியும் பயனளிக்கவில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட "கவச்' என்கிற பாதுகாப்பு உபகரணம் 2% இடங்களில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
 68,000 கி.மீ. நீளமுள்ள இந்திய ரயில்வே கட்டமைப்பு இந்தியாவின் உயிர்நாடி. நாள்தோறும் 20,000-க்கும் அதிகமான ரயில்கள் அந்தத் தண்டவாளங்களில் இயங்குகின்றன. இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் பயணிக்கிறார்கள். 33.20 லட்சம் டன் சரக்கு
 களைக் கையாள்வதும் ரயில்வேதான். அதே நேரத்தில், தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன என்பதும் கசப்பான உண்மை.
 கடந்த ஆறு ஆண்டுகளில் பெரிதும் சிறிதுமாக 246 ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன. அவற்றில், குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் 163 விபத்துகள் (75%) ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்
 படுகின்றன. ஒன்று, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பம் பொருத்தப்படாமல் இருப்பது; இரண்டு, போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது.
 ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 3.12 லட்சம் ஊழியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கக்கோட்கர் கமிட்டி, டி.பி. திரிபாதி அறிக்கை போன்றவை ரயில் ஓட்டுநர்கள், ஊழியர்களின் பணிச்சுமை குறித்துக் குறிப்பிட்டிருக்கின்றன. அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதிலும் அக்கறை செலுத்தப்படுவதில்லை.
 ரயில்வே நவீனமயமாதல், ரயில் நிலையங்கள் மேம்பாடு, புதிய விரைவு ரயில்கள் அறிமுகம் போன்ற அனைத்துமே அத்தியாவசியம்தான். விபத்து ஏற்பட்டது என்பதற்காக அந்தத் திட்டங்கள் தடம்புரளக் கூடாது. அதே நேரத்தில், தவறைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது; அந்தத் தவறுகள் களையப்பட வேண்டும். அதில் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் ரயில்வேயின் மிகப் பெரிய குறைபாடு.
 பாலசோர் ரயில் விபத்தை மத்திய - மாநில அரசுகள் இணைந்து எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT