தலையங்கம்

அலை அலையாய் சோதனை! | பரிசோதனை, தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதை வலியுறுத்தும் தலையங்கம்

ஆசிரியர்

மும்பை, தில்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் அதிதீவிரமாகப் பரவிவரும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்த நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம், பொது - தனியார் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் என்று நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பல முடிவுகள்  அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நேற்றைய நிலையில் இந்தியாவில் 2,61,500 புதிய பாதிப்புகளும், 1,501 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை மொத்தம் 1,47,88,109 பாதிப்புகளும், 1,77,150 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. தினசரி 1% அளவில் புதிய பாதிப்புகளும், 7% அளவில் நோயின் கடுமையும் அதிகரித்து வருகிறது என்பதி லிருந்து எந்த அளவுக்கு மோசமாக கொள்ளை நோய்த்தொற்று பரவி வருகிறது என்பது தெரிகிறது. 

2020-இல் நாளொன்றுக்கு 15,000 பாதிப்பிலிருந்து உச்சகட்ட பாதிப்பான நாளொன்றுக்கு 97,000-ஐ எட்டுவதற்கு மூன்று மாதங்கள் (90 நாள்கள்) பிடித்தன. அதுவே இரண்டாவது அலையில், நாளொன்றுக்கு 1 லட்சம் பாதிப்பிலிருந்து 2 லட்சம் பாதிப்பாக  அதிகரிக்க பத்தே நாள்தான் தேவைப்பட்டிருக்கிறது. 

இரண்டாம் அலை நோய்த்தொற்று என்று சாதாரணமாக சொல்லிவிட்டாலும்கூட, இதன் பின்னணியில் இருக்கும் பல நுணுக்கமான மாற்றங்கள் அச்சப்பட வைக்கின்றன. நோய்த்தொற்றுக் கிருமியின் உருமாற்றம் பல்வேறு வகையிலானதாக தெரியவந்திருக்கிறது.  

தென்னாப்பிரிக்க உருமாற்றம் அதிவேகமாக பரவுவதுடன், குழந்தைகள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது; பிரிட்டிஷ் உருமாற்றம் ஏனைய கொவைட் 19 கிருமிகளைவிட 70% வேகமாக பரவக்கூடியது; பிரேசில் உருமாற்ற தீநுண்மி ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பாதிக்கிறது; பெங்களூரில் சில குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொவைட் 19 தொற்று, கலிபோர்னியா தீநுண்மி உருமாற்றத்தை ஒத்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது - இதையெல்லாம் பார்க்கும்போது கொவைட் 19-இன் பல்வேறு தீநுண்மி உருமாற்றங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது தெரிகிறது.

இரண்டாவது அலை என்பது எப்போதுமே முதல் அலையைவிட கடுமையானது. 1918-இல் உலகை தாக்கிய ஸ்பானீஷ் ஃபுளூ தீநுண்மியின் முதல் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதுவே ஓராண்டு கழிந்து 1919-இல் உருமாற்றம் அடைந்த தீநுண்மியாக பரவியபோது கொள்ளை நோய்த்தொற்றாகப் பேரழிவை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஸ்பானீஷ் ஃபுளூ இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டு கோடி பேரின் உயிரிழப்புக்குக் காரணமானது. 

1918-இல் ஸ்பானீஷ் ஃபுளூ தீநுண்மியைப் போலவே  2019-இல் கொவைட் 19 தீநுண்மி உருவானபோதே பலரும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகம் எதிர்கொண்ட அனுபவத்தைச் சுட்டிக்காட்டி எச்சரித்தனர். 2021-இல் நாம் எதிர்கொள்ளும் கொவைட் 19-இன் இரண்டாவது அலை அதை உறுதிப்படுத்துகிறது. தீநுண்மிகளுக்கு உருமாற்றம் என்பது இயல்பு. உருமாறும்போது வீரியம் அதிகரிப்பது இயற்கை. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தியா மட்டுமல்லாமல் உலகில் வேறு பல நாடுகளிலும் நோய்த்தொற்றுப் பரவல் எதிர்பாராத அளவில் அதிகரித்து வருகிறது. முந்தைய நிலையிலிருந்து மாறுபட்டு வீரியம் அதிகரித்த நிலையில், கொவைட் 19 சர்வதேச அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. 

பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளில் பயணத் தடைகளும், பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேசப் பயணம் அனுமதிக்கப்பட்டதால்தான் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட தீநுண்மி உருமாற்றங்கள் பரவி வருகின்றன என்கிற உண்மையை உலகம் தாமதமாக உணர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாது அலை நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய மருத்துவ நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தேவையான அளவில் அவசர சிகிச்சை படுக்கைகள் இல்லை என்பது மட்டுமல்ல, வென்டிலேட்டர்கள், பிராண வாயு சிலிண்டர்கள், ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 

கடந்த முறை முதல் அலையை எதிர்கொண்டதுபோல இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாமல் எல்லா மாநில அரசுகளும் திணறுகின்றன. முதல் அலையின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து அரசு தரப்பிலும், மருத்துவத் துறையினர் தரப்பிலும் ஏற்பட்ட மெத்தனத்தால் கொவைட் 19-ஐ எதிர்கொள்ள உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பு வசதிகள் அகற்றப்பட்டுவிட்டன என்பதுதான் அதற்குக் காரணம். 

இஸ்ரேலில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்புகள் மிகக் கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. குறைந்தது 65% முதல் 70% மக்கள்தொகையினர் பாதிப்புக்கு உள்ளாக வேண்டும்; அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் பொது எதிர்ப்பு சக்தி உருவாக முடியும். 

தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவது, தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிப்பது, சோதனைகளை அதிகரித்து குணப்படுத்துவது என அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்காமல் தீநுண்மி தாக்குதலில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியாது. இல்லையென்றால், அமெரிக்காவைப் போல மிக மோசமான மூன்றாவது அலையை சந்தித்து ஸ்பானீஷ் ஃபுளூ கொள்ளைநோயைப் போல கோடிக்கணக்கானவர்களை நாம் பலிகொடுக்க வேண்டி வரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT