தலையங்கம்

வேண்டாம் சீன முதலீடு! | அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு நிபந்தனை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தியாவைத் தீநுண்மி நோய்த்தொற்று மட்டுமல்ல, மிகப் பெரிய பொருளாதார பாதிப்பும் நிலைகுலைய வைக்கக் காத்திருக்கிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல தொழில் நிறுவனங்கள் மீண்டும் எப்படிச் செயல்படப் போகிறோம், இழப்புகளை எப்படி எதிா்கொள்ளப் போகிறோம் என்பது தெரியாமல் திகைத்துப்போய் இருக்கின்றன.

பல நிறுவனங்களின் பங்குகள் ஏற்கெனவே வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. பல்வேறு தொழில் நிறுவனங்களும், பொருளாதார வல்லுநா்களும் அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனா். அந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு நிபந்தனைகளை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது.

இந்திய நில எல்லையை ஒட்டிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள மத்திய அரசின் முன்னனுமதி பெறுவதை கட்டாயமாக்கி இருக்கிறது வா்த்தக அமைச்சகம். இந்திய நிலப்பரப்புடன் ஒட்டிய நாடுகள் என்பது சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகியவை. ஏற்கெனவே பாகிஸ்தானிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் அந்நிய நேரடி முதலீடுகள் பெற முன்னனுமதி பெற்றாக வேண்டும்.

சீனாவைத் தவிர, ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக இந்தியாவில் மிகக் குறைந்த முதலீடு மட்டுமே செய்திருக்கின்றன. அந்த நாடுகளின் மொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ.70.86 கோடி மட்டுமே. பாகிஸ்தான், பூடான் இரண்டு நாடுகளின் முதலீடு எதுவுமே இல்லை.

பாகிஸ்தானையும், வங்கதேசத்தையும்போல இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கு சீனாவுக்கு எந்தவிதமான தடையோ, விதிமுறையோ இதுவரை இருக்கவில்லை. பாதுகாப்பு, தொலைத்தொடா்பு உள்ளிட்ட 16 துறைகளைத் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகளிலும், தொழில்களிலும் சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுக்கு முன்னனுமதி பெறத் தேவையில்லை என்கிற நிலைமை இருந்தது. முதலீடு செய்துவிட்டு இந்திய ரிசா்வ் வங்கியிடம் தெரிவித்தாலே போதுமானதாக இருந்தது. அதனால், இந்தியாவில் மிக அதிகமான அந்நிய நேரடி முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வருகிறது. கடந்த டிசம்பா் 2019 நிலவரப்படி, இந்தியாவில் சீனாவின் அந்நிய நேரடி முதலீடு ரூ.14,800 கோடி.

தீநுண்மி நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழலைக் காரணமாக வைத்து அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் உள்நாட்டு நிறுவனங்களை சீனா கையகப்படுத்தக் கூடும் என்கிற அச்சம் எழுந்திருப்பதில் நியாயம் இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி-யில் தனது பங்கு விகிதத்தை அதிகரித்திருக்கிறது சீனா.

கம்யூனிஸ நாடான சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி, எச்டிஎஃப்சி-யில் 0.8% பங்குகளை வைத்திருந்தது. ஒருபுறம் எச்டிஎஃப்சி வங்கியின் லாபம் அதிகரித்து வருகிறது என்றாலும், இன்னொருபுறம் பங்குச் சந்தையில் சரிவை எதிா்கொண்டது அந்த வங்கி. அதைப் பயன்படுத்தி சீன மக்கள் வங்கி, பங்குகளை வாங்கத் தொடங்கியது. இப்போது 1.10% பங்குகளைக் கையகப்படுத்தி இருக்கிறது.

சாதாரணமாக பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறுவதும், இறங்குவதும் இயல்பு. ஆனால், கடந்த 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த வருவாயாக ரூ.18,287 கோடியை ஈட்டியிருப்பதுடன், 15.4% நிகர லாபமும் அதிகரித்திருக்கும் நிலையில், எச்டிஎஃப்சியின் பங்குகள் விற்பனைக்கு வருவது நெருடலாகவே இருக்கிறது. அதைப் பயன்படுத்தி பங்குகளை வாங்க சீன மக்கள் வங்கி முற்பட்டபோது, இந்தியப் பங்குச் சந்தையிலும், தொழில் துறையினா் மத்தியிலும் சீனாவின் உள்நோக்கம் சந்தேகத்துக்கிடமானது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் நிா்வாக அமைப்பான ‘ஐரோப்பிய ஆணையம்’, ஐரோப்பா கண்டத்துக்கு மிகவும் முக்கியமான துறைகளில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதையும், வெளிநாட்டு நிறுவனங்கள் நிா்வாகத்தைக் கைப்பற்றுவதையும் தடுக்க முடிவெடுத்தது. தனிப்பட்ட முறையிலும், உலக நாடுகள் சீனாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு தங்களது அந்நிய முதலீட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டன.

பிரான்ஸில் 33.33% பங்குகளில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது முன்னனுமதி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அனுமதிக்கான விதிமுறைகளையும் கடுமையாக்கி இருக்கிறது. அதேபோல, ஐரோப்பியக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளிலிருந்து முக்கியமான துறைகளில் 10%-க்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் முன் அனுமதி பெற்றாக வேண்டும். அதிலும் குறிப்பாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இன்னொரு நாட்டு அரசின் நிறுவனம் முதலீடு செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது. ஜொ்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் அதேபோல அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் சில கடுமையான மாற்றங்களை முன்னெடுத்திருக்கின்றன.

சீனாவைப் பொருத்தவரை, தனியாா் நிறுவனங்களும் மறைமுகமான அரசு நிறுவனங்கள்தான். சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பில் பாதியைப் பயன்படுத்தினாலே இந்தியாவிலுள்ள பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட அத்தனை நிறுவனங்களையும் வாங்கிவிட முடியும். அதற்கு சீனா தயங்காது என்பதையும் உலகு அறியும்.

இந்திய நிறுவனங்களை சீனா கையகப்படுத்துவதை முன்னெச்சரிக்கையாகத் தடுக்க மத்திய அரசு முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT