சிறப்புக் கட்டுரைகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா: தந்தை வழியில் தனயன்...!

DIN


மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஈராண்டு காலத்தில் சரித்திரம் படைக்கும் வகையில் சாதனைகளைப் படைத்துள்ளது.

 "திராவிட மாடல்' அரசான திமுக அரசு பிற மாநிலங்கள் போற்றும் வகையில் செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் அளவுக்கு ஈராண்டு காலத்திலேயே நிறைவேற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து,  மே 7 இல்  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், எளிய விழாவில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

பதவியேற்ற  அன்றே தலைமைச் செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.2,000 நிவாரணம், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பு ரூ. 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் ரூ.4,000 நிவாரண நிதி வழங்கப்பட்டது.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பெண்கள், திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா  பேருந்துப் பயணம் ஆகியன திட்டங்களும் உடனே நடைமுறைக்கு வந்தன.

கரோனா தொற்று  உச்சத்தில் இருந்தபோது,  இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாதபடி விரைவான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு, பெரும் பாதிப்பில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றினார்.

கல்வி, மருத்துவத்துக்கும் முக்கியத்துவம்: முதல்வர்  பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் செலவினங்கள்  வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன.  

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீதம் ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு  அமைப்பு,   மக்களின் குறைகளைப் போக்க "உங்கள் தொகுதியில் முதல்வர்'  என்ற தனித்துறையை உருவாக்கி  இணைய வாயிலாக புகார்கள் பெறுதல், காவல் துறையில் பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்தது,  போலீசாருக்கு வார விடுப்பு, மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம்,  தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள்} கனவு இல்லம், சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை,  நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது என்று நாளொறு திட்டமாக அடுத்தடுத்து மக்கள் நலனுக்காகத் திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டன.

இவை தவிர,   மின்சாரப் புகார்களை நுகர்வோர்  24 மணி நேரமும் இயங்கும் "மின்னகம்' என்னும் புதிய மின் நுகர்வோர் சேவை மையம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு  ஊக்கத்தொகை,  கரோனா காலத்தில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை வரவழைக்க அரசின் பல்வேறு நடவடிக்கைகள், அபுதாபி, துபை,  ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதல்வரே நேரில் சென்று அந்நிய முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு ஈர்த்து வந்தது,  தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த "தகைசால் தமிழர்' புதிய விருது,   மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் "மக்களைத் தேடி மருத்துவம்' என்றும் திட்டங்கள் தொடர்கின்றன.

கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு, அனைத்துத் துறைகளிலும் மக்களுக்கான திட்டங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டுவருகிறது.

இலங்கை அகதிகள் முகாம் என்பது "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

டிசம்பர் மாதத்தில் வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றியது,  விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் என்று மக்கள் நலத் திட்டங்கள் தொடர்கின்றன.

புதுமைப் பெண் திட்டத்தின்படி, 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.  

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தையும் விரைவில் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்தத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொடக்கிவைக்கப்பட உள்ளது.

ஆன்மிகத்துக்கும் முக்கியத்துவம்:  கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் "அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டம்,  பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை மீட்டது,  நூற்றுக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேகப் பணி தொடக்கம்,  அறநிலையத் துறை சொத்துகளைப் பாதுகாத்தல், அன்னதானத் திட்டத்தைச் செம்மைப்படுத்துதல் ... என்று ஆன்மிக ஆர்வலர்களும் போற்றும் அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விளங்கிவருகிறது.

மருத்துவம் போன்றே பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு என்று கல்வி சார்ந்த திட்டங்கள் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

சமூகநீதிக் காவலர் ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாளான செப்,. 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக அறிவித்தது,  அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது,  சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைத்தது  என்று சமூக நீதியைக் கடைபிடிக்கும் அரசாக திமுக அரசு விளங்கிவருகிறது.

தியாகிகளைப் போற்றும் அரசு:  செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150வது ஆண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்ததோடு, கோவையில் வ.உ.சி. க்குச் சிலை அமைத்தது, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு வ.உ.சி.யின் பெயர்,  அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் என்று பல்வேறு பணிகளை திமுக அரசு மேற்கொண்டது. சமூக நீதியை நிலைநிறுத்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை, கடலூரில் தியாகி அஞ்சலையம்மாளுக்கு சிலை,  மயிலாடுதுறையில் சமூகப் போராளி மூவலூர் ராமமிர்தம் அம்மையாருக்கு சிலை,  புதுக்கோட்டையில் முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை, குடியாத்தத்தில் அண்ணல் தங்கோவுக்கு சிலை... என்று தியாகத்தையும், தியாகிகளையும் போற்றும் அரசாக திமுக அரசு இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனைகள் என்பது அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பெற்ற சாதனையாகவே இருக்கிறது.

முதல்வராக பதவியேற்ற ஈராண்டிலேயே 80 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்பது பொன் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திலேயோ, கரோனா பேரிடரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே சாதனைகளைப் படைத்த சரித்திரம் போற்றும் அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளங்கி வருகிறது.

தொகுப்பு: தி.நந்தகுமார், மனோபாரதி, க.சிவக்குமார்,  டி.மணிமாறன், அ.ராஜேஷ், பெ.பாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT