சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: கடனால் சூழ்ந்த லங்கா; நேரடி ரிப்போர்ட்- 10

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

பேரீச்சம் பழத்துக்கான ரூ. 200 வரியை ரமலான் நோன்பை முன்னிட்டு 199  ரூபாயாக இலங்கை அரசு குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு  வேடிக்கைத்தனமானது. ரூ. 200-க்கும் 199-க்கும் என்ன வித்தியாசம்? இது ஒரு விலைக் குறைப்பா?

மேலும், முக்கியமான / அத்தியாவசியமான 12 பொருள்களின் விலை 338 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாள்தோறும் உழைத்து வாழும் தொழிலாளர்களுக்குத் தொழில் இல்லாததால் வருவாயும் இல்லை.

இந்த நிலையில், பொருள்களின் விலைகள் 338% அதிகரித்தால் தின வருவாயும் 1800 x 3.38 = 6084 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

ஓர் அரசுப் பணியாளர் மாதம் ரூபாய் 50,000/- பெற்றிருந்தால் அச்சம்பளம் 50,000 x 3.38 = ரூபாய் 169,000/- ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதுவும் இல்லை.

அப்படியென்றால் சோமாலியாவை நோக்கிதான் இலங்கையும் நகர்கிறது. உகண்டாவில் இடி அமீனின் ஆட்சிக் காலத்திலும் ஒவ்வொரு நாளும் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகத் தகவல் உண்டு.

இந்த அவலத்திலும், முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் மணலாறு திருப்பும் மூன்று சந்தியில், சைவர்கள் விரும்பும் வேம்பு மரம் வெட்டப்பட்டுப் புத்த மத அடையாளமான போதி மரம் நாட்டப்பட்டுள்ளது.

வேப்ப மரம் போதி மரமாகிவிட்டதோ? அதனால்தான் போதி மரத்தின் சில்லென்ற காற்று இவ்வளவு கசப்பாக உள்ளதோ?

மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவையும் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவையும் சந்தித்தார். சந்திப்பில் திரும்பவும் இந்தியாவிடம் கடன் உதவி கேட்டுள்ளனர். உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாக வழங்கியது போதுமானது அல்ல என இலங்கை சார்பில் சொல்லப்பட்டதாகத் தகவல்.

கொழும்பில் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜெய்சங்கர் இலங்கை சென்றார்.

இந்த ஆண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உள்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வெளியுறவு அமைச்சகத்துக்கான சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பல பத்தாண்டுகளாக இலங்கையில் நிலவும் இன நெருக்கடி, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகக் கையாளுகையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும்.

சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசை கோரிக்கையை முன்னதாகவே ஏற்றிருந்தால் நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும்.

எவ்வாறாயினும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட அரசாங்கங்கள் அரசியல் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வையே தேர்ந்தெடுத்தன. உண்மையில், அதுவே இன்றைய பேரழிவுகரமான கடன் நெருக்கடிக்குள் அந்த நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.

வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால், பல ஆண்டுகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்துடன் நடத்தப்பட்ட அரச பயங்கர யுத்தமானது இன்று தீவு நாட்டின் அனைத்து சமூக மக்களினதும் தோள்களில் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும் சுமத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னருங்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை. மாறாக கோத்தபய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட அப்போதைய அரசாங்கம், தமிழ் மக்களைப் போரில் வெற்றி கொண்டுவிட்டோம் என்கின்ற மனப்பான்மையுடன் தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தியது. அதுவே, அந்நேரத்தில் பெரும் ஆற்றலையும் விருப்பத்தையும் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதைத் தடுத்திருந்தது.

2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கலாம். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வொன்றை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் காணப்போவதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் செயலர் உட்பட பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கும் உறுதியளித்திருந்தார். அவர் அதனைச் செய்திருந்தால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பார்.

முன்னாள் அதிபர் மஹிந்த, நாட்டின் மிக சக்திவாய்ந்த மனிதராக இருந்தபொழுது, அரசியல் தீர்வுக்கான சாத்தியமான யோசனையாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக குமாரணதுங்கவினால் முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஓர் அரசியல் தீர்வு இருந்தது. அதனை இந்த நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்த மஹிந்த அமல்படுத்தியிருக்கலாம்.

அவர் வாக்குறுதியளித்தபடி 13-வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண விரும்பாவிட்டாலும், குறைந்தபட்சம் 13-வது திருத்த வரைவை, அதன் ஆரம்ப அசல் வடிவிலேயே முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கான துணிவு அவருக்கு இருக்கவில்லை. நாட்டில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆற்றலுடன் இருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களுக்கு உரிய இடத்தினை வழங்க அரசாங்கம் முன்வராததால் விலகி நிற்க முனைந்தனர்.

இதற்கிடையில், நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மேம்படுத்தப்பட்ட இந்த அதிகாரிகளின் சிங்கள பௌத்த பெரும்பான்மை மனோநிலை, அந்த முதலீட்டாளர்களின் பெரும் உற்சாகத்தைச் சிதைத்துவிட்டது. முதலீட்டாளர்கள் மீது சுமத்தப்பட்ட தாங்க முடியாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சுமைகள் அவர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வசிக்கும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. சில முதலீட்டாளர்கள் நாட்டின் தென் பகுதியிலேயே முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். தனிப்பட்ட முறையில், இதுபோன்ற சில சம்பவங்களை நான் அறிவேன். மேலும், இதுபோன்ற பல சம்பவங்கள் பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய ஆட்சி முறை என்கின்ற நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான பரிந்துரையாக குறைந்தபட்சம் ஏற்கெனவே அரசியலமைப்பில் உள்ள அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை அதன் ஆரம்ப வடிவிலேயே, முழுவதுமாக செயல்படுத்துவதே தற்போதைய பொருளாதார அவல நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான ஒரே வழி.

தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிய நிச்சயமாக அயலகக் கண்காணிப்பில் நடுநிலையான ஒரு பொது வாக்கெடுப்பு (Referandum) வேண்டும். இதுவே தீர்வு.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT