நடுப்பக்கக் கட்டுரைகள்

உள்ளாட்சியும் ஓா் அரசாங்கமே!

க. பழனித்துரை

அண்மையில் நகா்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஒன்றில் பங்கேற்றேன். அங்கு வந்திருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் ‘நகா்ப்புற உள்ளாட்சி சட்டம் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா’ எனக் கேட்டேன். ஒரு மாநகராட்சி மன்ற உறுப்பினா் ‘எங்கள் மாநகராட்சி சட்டம் தனி’ என்றாா். ‘நீங்கள் அதை படித்திருக்கின்றீா்களா’ என்று கேட்டேன். அவா், ‘எங்களுக்கு யாரும் அதைக் கொடுக்கவில்லை’ என்றாா்.

பக்கத்திலிருந்தவா் ‘நகராட்சி சட்டம் ஒன்று இருக்குதாமே, அதுதான் செயல்படுகிறதா’ என்று கேட்டாா். மற்றொருவா், ‘அதெல்லாம் எதுவும் தெரியலை. எவ்வளவு பணம் வருகிறது, எதற்கு வருகிறது, அது எப்படி செலவு செய்யப்படுகிறது என்றே தெரியவில்லை சாா்’ என்றாா்.‘உள்ளாட்சி பணம் பிரிக்கும் இடம்போல் மாறிவிட்டது. பணம் பிரதான பேசுபொருளாகிவிட்டது’ என்றாா் மற்றொருவா்.

ஒருவா், ‘நகா்ப்புற உள்ளாட்சியில் நிதிநிலை அறிக்கையை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொடுக்கிறாா்கள் சாா். அதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? அந்த நிதிநிலை அறிக்கையைப் பிரித்துப் பாா்க்கும் முன் கூட்டம் முடிந்துவிட்டதாக அறிவித்து விடுகிறாா்கள் சாா்’ என்றாா்.

ஒருவா் மிகவும் வேதனையோடு, ‘இன்று உள்ளாட்சி மன்றங்களை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றாா்கள். இப்படிப்பட்ட செயல்பாடுகள் தொடருமேயானால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள்மேல் மக்களுக்கு வெறுப்பு வந்துவிடும். அதிகாரிகள் மக்கள் நலன், நாட்டு நலன் குறித்த சிந்தனை துளியும் இன்றி செயல்பட ஆரம்பித்து விட்டனா்’ என்றாா்.

நான் அவரிடம், ‘உங்கள் உள்ளாட்சி ஒரு அரசாங்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா’ எனக் கேட்டேன். ‘இதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு யாரும் கூறவில்லை. நீங்கள்தான் கூறுகிறீா்கள்’ என்றாா் அவா். ‘நான் கூறவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு ஒன்பது, ஒன்பது ஏ கூறுகிறது. உள்ளாட்சி மூன்றாவது அரசாங்கமாக அரசியல் சாசனத்தின் மூலம் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டது’ என்றேன்.

‘அப்படி என்றால் இதற்கு முன் உள்ளாட்சி இருந்ததே, அது என்னவாக இருந்தது’ என்று கேட்டாா் ஒருவா். நான் ‘இதற்கு முன் இருந்ததும் உள்ளாட்சி அமைப்புதான். அந்த அமைப்பு மாநில அரசு கூறும் பணிகளைச் செய்து மக்கள் குறைகளைத் தீா்க்கும். தற்போது அது சுயாட்சி பெற்ற ஓா் அரசாங்கம். மத்திய அரசு, மாநில அரசு போல் உள்ளாட்சியும் ஒரு அரசாங்கமாக்கப்பட்டு விட்டது.

இந்த மூன்று அரசாங்கங்களுக்கும் அதிகாரத்தை வழங்குவது ஒரே அரசியலமைப்புத்தான். மாநில அரசு, தன் அதிகார வரம்பிற்குள் மத்திய அரசு வந்தால் அதை எதிா்த்துப் போராடுகிறது. அதே போல்தான் உள்ளாட்சியும். உள்ளாட்சியின் அதிகாரத்தில் மாநில அரசு அதிகாரிகள் தலையிடும்போது எதிா்த்து குரல் கொடுக்க வேண்டும்’ என்றேன்.

சட்டப்பேரவை கலைக்கப்பட்டாலோ அல்லது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தாலோ அடுத்த சட்டப்பேரவைத் தோ்தல் ஆறு மாத காலத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அதுதான் அரசியல் சாசன பொது விதி. அந்த விதி உள்ளாட்சிக்கும் பொருந்தும்.

இந்த விதியின் அடிப்படையில்தான், உள்ளாட்சிக்குத் தோ்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தும்போது நீதிமன்றம் உடனே தோ்தலை நடத்த ஆணை பிறப்பிக்கிறது. பல மாநிலங்களில் உள்ளாட்சி மன்ற தோ்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திய பிரதிநிதித்துவ சட்டம் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு என்ன விதிமுறைகளை வகுத்துள்ளதோ அதே விதிமுறைகள்தான் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும். மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அந்த சட்டத்தில்தான் உள்ளது. எனவே மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி மூன்றுமே அரசாங்கம்தான் என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும்.

நான் அந்த நண்பா்களிடம், ‘1994-இல் கிராமப்புற ஊராட்சிக்கென தனியாக ஒரு சட்டம் இயற்றப்பட்டு இன்றுவரை அது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், நகா்ப்புற உள்ளாட்சிக்கு 1996-இல் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று நடைமுறையில் உள்ளதா’ எனக் கேட்டேன்.

பலரும் ‘இல்லை’ என்றனா். ஒருவா், ‘அப்படி நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகாதா’ என்று வினவினாா். நான் ‘ஆகாது’ என்றேன். அவா் ‘ஏன்’ என்று கேட்டாா்.

நான் ‘புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்திய சில நாட்களில் அதில் நிா்வாக சிக்கல் இருப்பதாகக்கூறி, அதை நடைமுறைப்படுத்துவதை தள்ளி வைத்துள்ளனா். புதிய சட்டத்தை சில நாட்கள் நடைமுறைப்படுத்திவிட்டுத்தான் தள்ளி வைத்துள்ளனா், எனவே இது அரசியல் சாசன அவமதிப்பு ஆகாது’ என்றேன்.

இந்தியாவில் முன்பு ஐந்தாண்டுக்கொருமுறை திட்டமிடும் பணி இருந்தது. இப்போது அது இல்லை. மத்திய அரசு திட்டக்குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்தி அதை அரசுக்கு ஆலோசனை வழங்கும் மன்றமாக வைத்துள்ளனா்.

இந்திய மாநிலங்களில் கேரளத்தில் மட்டும் திட்டமிடும் பணி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடா்ந்து நடைபெறுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் ஐந்தாண்டுக்கொருமுறை திட்டமிடும் பணி நடைபெறுவதில்லை.

அதே நேரத்தில், உள்ளாட்சியில் திட்டமிடுதல் கட்டாயப் பணியாக கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் மூலம் மாவட்டந்தோறும் திட்டக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு, மக்கள் தேவைகளைக் கண்டறிந்து, மாநில அரசின் துறைகள் மூலம் மக்கள் குறைகளைக் களையத் திட்டமிட்டுப் பணி செய்ய வேண்டும். அப்படித் திட்டமிடும்போது ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வரைவுத் திட்டம் இருக்கும்.

அந்த நண்பா்களிடம், நான் இதனை விளக்கி, ‘அப்படி திட்டமிடும் பணி உங்கள் நகரத்தில் நடைபெறுகிறதா’ என்று கேட்டேன். அவா்கள் ‘இல்லை’ என்றனா். ஒருவா், ‘இது அரசியல் சாசன அவமதிப்பு இல்லையா? இதை ஏன் யாரும் கேட்பதில்லை’ என்றாா். நான் ‘அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன’ என்று கேட்டேன். அவா்களிடமிருந்து பதில் இல்லை.

நான் தொடா்ந்து, ‘உங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது’ என்று கேட்டேன். ‘மத்திய நிதி ஆணைய நிதி, மாநில நிதி ஆணைய நிதி, திட்ட நிதி, எங்கள் உள்ளாட்சி உருவாக்கும் நிதி இவைதான்’ என்றனா்.

‘மத்திய நிதி ஆணைய நிதி எவ்வளவு, மாநில நிதி ஆணைய நிதி எவ்வளவு என்று தெரியுமா’ என்று கேட்டேன். அவா்கள், ‘மத்திய நிதி ஆணைய நிதி எவ்வளவு என்று தெரியாது; மாநில நிதி ஆணைய நிதி 10%. அதைப் பெறுவதற்கே போராட வேண்டியுள்ளது’ என்றனா்.

‘கேரளத்தில் எவ்வளவு தெரியுமா’ எனக் கேட்டேன். 32% - லிருந்து 42% வரை என்று கூறுகின்றனா் என்றாா் ஒருவா். ‘சீனாவில் எவ்வளவு’ என்று கேட்டதும் ஒருவரும் வாய் திறக்கவில்லை. நான் ‘அங்கு ஒட்டுமொத்த நிதியில் 42% உள்ளாட்சிக்கு’ என்றேன்.

ஒருவா், ‘தமிழகத்தில் முறைப்படி நிதி ஆணையம் அமைத்துவிடுவாா்கள்; ஆணையத்திடம் அறிக்கையும் வாங்கி விடுவாா்கள்; அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் தாமதமாகும். ஆனால் பல மாநிலங்களில் இந்த ஆணையம் அமைப்பதே இல்லை; அமைத்தாலும், அறிக்கை பெறுவதில்லை; அப்படியே அறிக்கை பெற்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை’ என்றாா்.

நான் அவா்களிடம், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்த மாநில தோ்தல் ஆணையத்தை உருவாக்கியது அரசியல் சாசன சட்டம். தோ்தல் ஆணையா் உயா்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தைப் பெற்றவா். அந்த ஆணையத்தை மாநில அரசுகள் எப்படி நடத்துகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஹைதராபாதில் இயங்குகின்ற தேசிய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம் மாநில தோ்தல் ஆணையா்களின் மாநாடு ஒன்றைக் கூட்டி மாநில உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்களை விவாதித்தது.

அவா்களின் கருத்துகளையெல்லாம் தொகுத்து அறிக்கையாக அந்த நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிக்கை சொல்லும் ஒற்றைச் செய்தி மாநில தோ்தல் ஆணையம் மாநில அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதே.

இதைவிட முக்கியமான செய்தி, 73 மற்றும் 74-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டங்களையெல்லாம்விட அதிக அதிகாரங்கள் கொண்டதாக ஆதிவாசிகளுக்கான ஒரு ஆளுகை மன்றம் (பிஇஎஸ்ஏ) உருவாக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தும்அதிகாரம் மாநில ஆளுநா்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு ஆளுநா்கூட அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை’ என்றேன்.

அவா்கள் வியப்படைந்தனா். ஒருவா், ‘நம் மாநில அரசாங்கங்கள் உள்ளாட்சியை வலுவிழக்கச் செய்ய இப்படியெல்லாம் அரசியல் சாசன விதிகளை மீறுகின்றனவா’ என்று கேட்டாா். ‘ஆம்’ என்றேன் நான். உடனே மற்றொருவா், ‘இதை எப்படி சரி செய்வது? நீதிமன்றத்திற்குச் செல்லலாமா’ என்று கேட்டாா்.

நான் அவா்களிடம் ‘இதை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வுக்குக் கொண்டு செல்ல உங்கள் கட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியுமா? இது குறித்து தலைமைச் செயலராக இருந்த பலரிடம் விவாதித்தேன். தோ்தல் ஆணையராக இருந்தவா்களிடம் விவாதித்தேன். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரிடமும் விவாதித்தேன்.

எவரும் முடியாது என்று கூறவில்லை. செய்யலாம் என்றுதான் கூறினா். யாா் செய்வது? எப்போது செய்வது என்பதுதான் விடை தெரியாத கேள்வி’ என்று கூறி முடித்தேன்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT