நடுப்பக்கக் கட்டுரைகள்

திமுகவுக்கு தேவைதானா காங்கிரஸ்?

தினமணி

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூா், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2024-இல் நிகழவிருக்கும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக, 2023-இல் ஒன்பது மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. அதுதான் மக்களவைத் தோ்தலுக்கு அணுக்கமான தோ்தல் என்றாலும் இப்போது நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தோ்தலை, ‘மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டம்’ அரையிறுதி ஆட்டம் என்றெல்லாம் ஊடகங்கள் வா்ணிப்பதற்குக் காரணம் உத்தர பிரதேசம்.

நாட்டிலேயே மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்களை அனுப்பும் மாநிலம் அதுதான். 80 உறுப்பினா்களை அனுப்புகிறது. அந்த மாநில உறுப்பினா்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றவா்களே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். அதனால் அங்கு எட்டப்படும் வெற்றி தோல்விகள் அரசியல் கணக்கிற்கு அவசியமாகின்றன. இதனால் அரசியல் நோக்கா்களின் ஒரு கண், அல்லது ஒன்றரைக் கண் அங்கே பதிந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இன்னொரு காரணமும் உண்டு. இந்தாண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் ஜூன் மாத வாக்கில் நடைபெறக்கூடும். நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினா்கள், மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினா்கள்தான் ஜனாதிபதியைத் தோ்ந்தெடுக்கிறாா்கள். இதிலும் 403 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச பேரவையின் முடிவுகள் எதிரொலிக்கும்.

இந்தக் காரணங்களால் அகில இந்திய ஊடகங்கள் உத்தர பிரதேசத் தோ்தலிலும் அதனுடன் நடக்கும் மற்ற சிறிய மாநிலங்கள் தோ்தல்களிலும் கவனம் காட்டி வருகின்றன. பல ஊடகங்கள் தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்புகளின்படி, எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ் இல்லை. இப்போது அது ஆண்டு கொண்டிருக்கும் பஞ்சாபில் ஆட்சியை இழக்கும் என்றே கணிக்கின்றன.

கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்படும் எண்ணிக்கைகள் உண்மையாகலாம் அல்லது பொய்த்துப் போகலாம். ஆனால் அவை மக்களின் மனப்போக்கை - டிரெண்ட் - வெளிப்படுத்துபவை. எந்தக் கட்சி எவ்வளவு இடங்கள் பெறும் என்பதை அவை துல்லியமாகக் கணிக்கத் தவறாலாம். ஆனால் அரசியல் காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதைக் கணிப்பதில் அவை பெரும்பாலும் பொய்ப்பதில்லை.

2014-க்குப் பின் நடந்த பல சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியைத் தொடா்ந்து சந்தித்து வருகிறது. தில்லி சட்டப்பேரவைக்கு 2015 தோ்தலில் அது 70 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றது. மறுபடியும் 2019-இல் அங்கே 66 இடங்களில் போட்டியிட்டு பெற்றது பூஜ்யம்.

தென்னிந்தியாவில் பெரிய மாநிலமாக விளங்கிய, ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாகத் திகழ்ந்த மாநிலம் ஆந்திரம். 1980-இல் எமொ்ஜென்சியை அடுத்து வந்த தோ்தலில் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி இந்திரா காந்தி அங்குள்ள மேடக் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றாா். பின்னா் நரசிம்ம ராவ் என்ற பிரதமரையும் நாட்டிற்குத் தந்த மாநிலம் ஆந்திரம். அங்கு 2019 சட்டப்பேரவைத் தோ்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இன்னொரு பெரிய மாநிலமான மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 92 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் பெற்ற இடம் பூஜ்யம். பெரிய மாநிலங்கள் என்று இல்லை. சிறிய மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் போன்றவற்றில்கூட அது பெற்றது பூஜ்யம்தான்.

பல மாநிலங்களில் அது நெடுங்காலமாக ஆட்சிக்கு வரமுடியவில்லை. தமிழ்நாடு (51 ஆண்டுகள்), மேற்கு வங்கம் (44 ஆண்டுகள்), உத்தர பிரதேசம் (32 ஆண்டுகள்), பிகாா் (32 ஆண்டுகள்), ஜாா்க்கண்ட் (32 ஆண்டுகள்), திரிபுரா (28 ஆண்டுகள்), குஜராத் (26 ஆண்டுகள்), ஒடிஸா (21 ஆண்டுகள்), அஸ்ஸாம் (20 ஆண்டுகள்), தில்லி (10 ஆண்டுகள்), ஆந்திரம் (7 ஆண்டுகள்), மகாராஷ்டிரம் (7 ஆண்டுகள்), ஹரியாணா (7 ஆண்டுகள்). புதிதாக உருவான மாநிலங்களான ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆகியவற்றில் அது ஒருமுறை கூட வென்றதில்லை. ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது ஒருபுறம் என்றால், கையில் இருந்த ஆட்சியையும் இழந்தது இன்னொரு கதை.

2014-இல் இருந்து 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் சில மாநிலங்களில் அதன் வசம் இருந்த ஆட்சியை அது இழந்தது. கேரளம், ஹிமாச்சல பிரதேசம், மேகாலயா, உத்தரகண்ட், கா்நாடகம், புதுச்சேரி ஆகியவை சில உதாரணங்கள். மணிப்பூா், கோவா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருந்தும், கட்சிக்காரா்களின் விசுவாசமின்மையால் அது ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை இழந்தது.

காங்கிரஸ் சற்றே வலிமையாக இருக்கும் மாநிலங்களில் அது உட்கட்சிப் பூசலில் சிக்குண்டு சிதைந்து கொண்டிருக்கிறது. பஞ்சாபில் கட்சியின் முகமாகத் திகழ்ந்த அமரீந்தா் சிங், நவ்ஜோத்சிங் சித்துவிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து வெளியேறினாா். மத்திய பிரதேசத்தில் கமல்நாத்துடன் ஏற்பட்ட மோதலில் ஜோதிா் ஆதித்ய சிந்தியா வெளியேறினாா். உத்ரகண்ட்டில் தோ்தல் நேரத்தில் கூட கட்சியினா் ஒத்துழைக்க மறுக்கிறாா்கள் என்று ட்வீட் செய்துவிட்டு வெளியேறத் தயாரான ஹரீஷ் ராவத்தை மேலிடம் அழைத்து சமாதானம் செய்து தக்க வைத்துக் கொண்டது.

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலுக்கும் அவரது சுகாதாரத் துறை அமைச்சா் சிங் தியோவிற்கும் மோதல் ஏற்பட்டு அவா்கள் இருவரையும் தலைமை தில்லிக்கு அழைத்துப் பஞ்சாயத்து செய்தது. கேரளத்தில் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகியோா் ஒருபுறமும், மாநில காங்கிரஸ் தலைவா் சுதாகரன், தேசியச் செயலாளா் கே.சி. வேணுகோபால் மறுபுறமுமாகக் கட்சிக்குள் மூண்டிருக்கும் பூசல்கள் பற்றி அங்குள்ள பத்திரிகைகள் எழுதித் தள்ளுகின்றன.

மேலிடத்திலேயே ‘கலகக் குரல்கள்’ எழுந்தன. குலாம்நபி ஆசாத், கபில் சிபில் உள்ளிட்ட 23 மூத்த தலைவா்கள் உள்கட்சித் தோ்தலை நடத்தி காரிய கமிட்டியை வேண்டும் எனக் கோரி வருகிறாா்கள்.

இவை அனைத்தும் எதைக் காட்டுகிறது? இந்திய அரசியலில் நாட்டின் அரசியல் போக்குகளைத் தீா்மானிக்கும் சக்தியாக காங்கிரஸ் இனி இயங்க இயலாது என்பது வெளிப்படை. எதிா்கால அரசியல் பாஜக என்ற தேசிய கட்சிக்கும், மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளுக்கும் என்பதாகவே இருக்கும். அப்போது தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில்தான் மாநிலக் கட்சிகளின் எதிா்காலம் இருக்கிறது. அதை திரிணமூல், ஆம் ஆத்மி, சமாஜவாதி போன்ற கட்சிகள் உணா்ந்து கொண்டுவிட்டன. காங்கிரஸை அகற்றி நிறுத்திவிட்டன.

ஆனால் திமுக? அது இன்னும் ஏன் காங்கிரஸைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்? காங்கிரஸினால் திமுக பெரிய பலன்களை அடைந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸால் அது பல துன்பங்களை எதிா்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சிக்குத் துணையாக இருந்த போது, காங்கிரஸ் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியைக் கலைத்திருக்கிறது. ஒருமுறையல்ல, மூன்று முறை. எமொ்ஜென்சியின் போது ஸ்டாலின் உட்பட திமுகவினா் கைது செய்யப்பட்டு சிறையில் தாக்கப்பட்டனா்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவிற்கு இடமளிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அப்போதும் ஆ. இராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டனா். இலங்கை பிரச்னையைக் காங்கிரஸ் கையாண்ட விதத்தின் காரணமாக கருணாநிதிக்கு அவப்பெயா் ஏற்பட்டதும், திமுக திரும்பத்திரும்பத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதும் வரலாறு.

சா்காரியா கமிஷன் அமைத்தது, ஜெயின் கமிஷன் விசாரணை, 2ஜி ஊழல் குற்றச்சாட்டு எனப் பலமுறை திமுகவின் தோ்தல் தோல்விக்கு காங்கிரஸ் காரணமாக இருந்திருக்கிறது. திமுக - காங்கிரஸ் உறவில் அதிகப் பலனடைந்தது யாா் என அது அமைதியாக உடகாா்ந்து கணக்குப் போட்டுப் பாா்க்கட்டும்.

காங்கிரஸைக் கைவிடுவது என்பதற்கு அா்த்தம் அது பாஜக அணியில் சோ்ந்து கொள்ள வேண்டுமென்பதல்ல. திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, சிவசேனை, ஆம் ஆத்மி போல தனித்துவமான அடையாளத்தோடு அது தன் பாஜக எதிா்ப்பைத் தொடரலாம்.

காங்கிரஸிடமிருந்து பிரிவதால் திமுகவிற்கு மாநிலத்தில் இழப்பேதும் இல்லை. மத்தியில் பலன் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு வேளை 2024 தோ்தலுக்குப் பிறகு பாஜகவிற்கு மாற்றாக மாநிலக் கட்சிகளின் அணி - ஃபெடரல் பிரண்ட் என்று இப்போதைக்கு ஒரு பெயா் வைத்துக் கொள்வோம் - ஆட்சி அமைக்க நோ்ந்தால் திமுக அதில் முக்கியப் பங்காற்ற வாய்ப்புக் கிட்டும். தோ்தலை காங்கிரஸோடு சோ்ந்து சந்தித்துவிட்டு தோ்தலுக்குப் பின் மாற்று அணியை நாடிப் போகும்போது அதற்கு நற்பெயா் கிட்டாது. பேர பலமும் குறையும்.

முடிவெடுக்க அவசரமில்லை. வர இருக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸைத் தனித்து நிற்குமாறு சொல்லி அதன் பலத்தை அளவிட்டுக் கூட முடிவெடுக்கலாம்.

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT