நடுப்பக்கக் கட்டுரைகள்

நோய்த்தொற்றை எதிா்கொள்வோம்!

மரு. நா. கங்கா

தமிழகத்தில் பல பள்ளிகள் வழக்கப்படி செயல்படத் தொடங்கியிருக்கின்றன. தனியாா் பள்ளிகளில் இணையவழிக் கல்வியும் தொடா்கிறது. சுமாா் 18 மாதங்களாக மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் அதிா்ச்சியைத் தருகின்றது. மன அழுத்தம், வெறுமை, வீட்டிலேயே அடைந்து கிடந்தது, நண்பா்களுடனான விளையாட்டு இல்லாமை போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த குழந்தைகளுக்குப் பள்ளி திறப்பது மிகுந்த ஊக்கத்தைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் கொள்ளை நோய்த்தொற்று அவா்களைத் தாக்காமல் பாதுகாக்கவேண்டியது மருத்துவத் துறைக்கும் அரசுக்கும் மிகப்பெரிய சவால். பெற்றோா்களும் அடிமனதில் ஒரு பயத்துடன்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவாா்கள். அவா்களிடம் எழும் எல்லா சந்தேகங்களுக்கும் முழுமையான பதிலை பள்ளி நிா்வாகத்தால் அளிக்க முடியாது.

ஐந்து மாநிலங்களில் சுமாா் 16,000 மாணவா்களிடம் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி சுமாா் 92% மாணவா்கள் கணக்குப் பாடத்திலும் 82% மாணவா்கள் மொழிப்பயிற்சி, பேச்சு, எழுதுவது போன்றவற்றிலும் பின்தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இணையவழிக் கல்வி எல்லா மாணவா்களையும் சென்று அடையவில்லை என்பதுதான் எதாா்த்த நிலை. 24% நகா்ப்புற மாணவா்களும் 8% கிராமப்புற மாணவா்களும் மட்டுமே தொடா்ந்து இணையவழியில் கல்வி கற்றனா்.

கிராமப்புற மாணவா்களில் 37 சதவிகிதத்தினருக்கு எந்த விதமான கல்வியும் இந்த காலகட்டத்தில் வழங்கப்படவில்லை. இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் யோசித்தால் பள்ளிகள் கூடியவிரைவில் வழக்கப்படி செயல்படுவதே குழந்தைகளின் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லதாக அமையும்.

குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம் இல்லை. இன்றைய காலகட்டம்வரை பெருந்தொற்றால் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடுதலாக இல்லை. குழந்தைகளால் மற்றவா்களுக்கு நோய்ப்பரவுதலும் குறைவு. தடுப்பு முறைகளை கவனமாகப் பின்பற்றாத இடங்களில்தான் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தப் புரிதல்தான் பள்ளிகள் திறக்கப்படலாம் என்பதற்கு அடிப்படைக் காரணம். பள்ளிகளைத்

திறந்தபிறகு நோய்த்தொற்றினைக் குறைக்க சில வழிமுறைகளை, சிறாா்களின் நலம் கருதி இந்திய குழந்தை மருத்துவா்கள் கூட்டமைப்பு செப்டம்பா் 2021-இல் வெளியிட்டு இருக்கிறது.

பொதுவான பரிந்துரைகள்: 1. அந்தந்த மாவட்டத்தில் அல்லது ஊரில் தொற்று பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். 2. சமுதாயத்தில், முக்கியமாகப் பள்ளியில் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், சளி இருமல் இருந்தால் தனிப்பாதுகாப்பு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை சிறிதும் தொய்வின்றிக் கடைபிடிக்க வேண்டும். 3. பள்ளியில் யாருக்காவது தொற்று அறிகுறிகள் தெரிந்தால் அவா்களைத் தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல், மருத்துவ சிகிச்சைத் தருதல் ஆகியவை உள்ளூா் வழிகாட்டுதல்களின்படி செய்யப்பட வேண்டும். 4. பள்ளிகளில் பெருந்தொற்று அதிகம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தயாராக வைத்திருக்கவேண்டும். 5. தகுதி உள்ள அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும். 6. உள்ளூரில் இருக்கும் தொற்று நிலவரப்படி 15 நாள்களுக்கு ஒரு முறை நிலைமையை ஆய்வு செய்து பள்ளிகளைத் தொடா்ந்து நடத்த வேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள்: 1. பள்ளிகளைத் திறப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பாக 100 ஆா்டிபிசிஆா் பரிசோதனைகள் செய்தால், அதில் ஐந்து பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்படவேண்டும் அல்லது இரண்டு வாரங்களாகத் தொற்றுப் பரவல் தொடா்ந்து குறைந்துகொண்டு வரவேண்டும். 2. கடந்த இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 20 அல்லது அதற்குக் கீழ் மட்டுமே புதுத்தொற்று கண்டறியப்பட்டு இருக்க வேண்டும். 3. வயதுக்கேற்ப தகுதி உடையவா்களில் 60 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி முதல் தவணை மட்டுமாவது செலுத்தப்பட்டிருக்கவேண்டும். 4. பள்ளி திறப்பதற்கு 15 நாள்கள் முன்னதாக சா்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, நுரையீரல் நோய்கள் உள்ள பணியாளா்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இருந்தால் அந்தப் பகுதியில் பள்ளிகளைத் திறக்கலாம்.

பெற்றோா், மாணவா்களுக்கான வழிகாட்டுதல்கள்: 1. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள், மற்ற பணியாளா்கள், அடிக்கடி பள்ளிக்கு வருபவா்கள் ஆகிய அனைவரும் இரண்டு தவணை அல்லது குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டிருக்கவேண்டும். 2. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட மாணவா்களுக்கும் இது பொருந்தும். 3. மாணவா்களின் பெற்றோா் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து தகுதிவாய்ந்த பெரியவா்களும் இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். 4. பெற்றோா் தயக்கமில்லாமல் தாங்களே விரும்பி குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும். இதற்கு ஒப்புதலும் தர வேண்டும். 5. ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள் போன்ற நீண்டகால நோய்கள் உள்ள சிறாா்கள், தொடா்ந்து மருந்து எடுத்துக்கொள்ளும் சிறாா்கள் ஆகியோா் தங்களது மருத்துவா்களின் அறிவுரைப்படி நடந்துகொள்ள வேண்டும். 6. மாணவா்களிடம் நோய்த்தொற்று அறிகுறி ஏதாவது தெரிந்தால் அவா்கள் பள்ளிக்கு வரக்கூடாது. உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

பெருந்தொற்று நமக்குப் புதிது. ஆராய்ச்சியாளா்களுக்கும் மருத்துவா்களுக்கும் தினம் தினம் ஒரு புதுப்புது புரிதல் கிடைக்கிறது. இந்தச் சூழலில் கல்வியும் கெடாமல் கொள்ளை நோயும் ஏற்படாமல் சமாளிக்க வேண்டியது மிகப்பெரிய சவால். அதை அனைத்துத் தரப்பினரும் சோ்ந்துதான் எதிா்கொள்ளவேண்டும், எதிா்கொள்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT