அறம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கோபி நயினார் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அறம். இப்படத்திற்குப் பின் நயன்தாராவின் மீதான கதாநாயகி பிம்பம் மேலும் உயர்ந்தது.
அதேநேரம், படத்தின் இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைப் பின் நடிகர் ஜெய்யை நாயகனாக வைத்து ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்கினார். ஆனால், இந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆதிபுருஷ்க்கு 10,000 டிக்கெட்கள் இலவசம்... காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர்!
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சியாமளா யோகராஜா என்கிற பெண் தொழிலதிபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ’இயக்குநர் கோபி நயினார் நடிகர் ஜெய்யை வைத்து ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தை எடுக்கப்போவதாகச் சொன்னார். அதற்காக, என்னை இப்படத்தில் முதலீடு செய்யவும் படத்தில் கிடைக்கிற லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் சொன்னார். நானும் நம்பி ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தேன். படத்தின் பூஜைக்குப்பின் நான் சென்னையிலிருந்து பிரான்ஸ்க்குக் கிளம்பிச் சென்றேன். நீண்ட நாள்களாக, படத்தின் பணிகள் குறித்து புதிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால் படக்குழுவை விசாரித்ததில் படத்தை கைவிட்டதாகச் சொன்னார்கள். இவர்களை நம்பித்தான் பணத்தை முதலீடு செய்தேன். என் பணம் எனக்கு திரும்ப வேண்டும். கோபி நயினார் உள்பட படத்தயாரிப்பில் தொடர்புள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டித்தரக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.