அடுத்த 6 மணிநேரம் பட்டாசாக இருக்கும் என்று தளபதி 67 படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் வெளியான நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது.
நடிகர் விஜய்யுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள தளபதி 67 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
ஒரு மாதமாக கொடைக்கானல் மற்றும் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காஷ்மீருக்கு தனிவிமானம் மூலம் சென்றனர்.
இந்நிலையில், அடுத்த 6 மணிநேரம் பட்டாசாகம் இருக்கும் என்று படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில மணித்துளிகளில் பிரபல நடிகர் சஞ்சய் தத், தளபதி 67-ல் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அடுத்த 6 மணிநேரத்திற்கு சிறிய இடைவெளிகளில் படத்தில் நடிக்கும் நடிகர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
இந்த பதிவு விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.