து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சாரிபில் தயாரிக்கப்பட்டுள்ள வீரமே வாகை சூடும் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. முன்னதாக படத்தின் டிரெய்லருக்கான அறிவிப்பில் கூட ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதலில் பிப்ரவரி 4 ஆம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் நிலை. இதன் காரணமாகவே வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீரமே வாகை சூடும் திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க, யோகி பாபு, குமாரவேல், ரவீனா ரவி, மாரிமுத்து, ஆர்என்ஆர் மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஷாலுக்கு எனிமி உட்பட கடைசியாக வெளியான சில படங்கள் வெற்றிபெறாததால் வீரமே வாகை சூடும் படம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் துவங்கவிருக்கிறார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்து நடிக்கவிருக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அது மட்டுமல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடிக்கிறார். மாநாடு படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.