'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் 1ஆம் நாள் திரையரங்கில் வெளியானது. முதல்நாள் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆனது. அடுத்தநாள் தமிழிலும் வெளியானது.
கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது:
கோல்டு படம் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அனைவரும் பார்க்க வேண்டும். என்னைப் பற்றியும் என் படத்தைப் பற்றியும் நிறைய கிண்டல்கள், அவதூறுகளை நீங்கள் கேட்கும் போது ஒரு மகிழ்ச்சி உண்டாகலாம். எதிர்மறை விமர்சனம் எழுதியவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள். டீ நன்றாக இல்லைன்னு சீக்கிரம் சொல்லுங்க!!! அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கப்பட்டதா? தண்ணீர் அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா? பால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ? பால் கெட்டுவிட்டதா அல்லது திரிந்து விட்டதா? டூ ஸ்வீட், ஸ்வீட்? இப்படி எதாவது கூறினால் அடுத்தமுறை டீ தயாரிக்கும்போது டீ மேக்கருக்கு பயனுள்ளதாக இருக்கும். அய்யே இடியட் டீ, அழுக்கு டீ, வாய்க்கு நல்லா இல்லாத டீ எனும்போது உங்கள் ஈகோ மட்டுமே ஜெயிக்கும். இரண்டாலும் ஒரு பயனும் இல்லை. இந்தப் படத்துக்கு நேரம் 2, பிரேமம் 2 என்று நான் பெயர் வைக்கவில்லை.தங்கம்தான் அர்த்தம். நானும், இந்தப் படத்தில் பணியாற்றிய எவரும் உங்களை வெறுக்க வேண்டும், புண்படுத்த வேண்டும், உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்க வேண்டும் என இந்தப்படம் நினைக்கவில்லை. என்னையும் என் குழுவையும் மீண்டும் சந்தேகிக்க வேண்டாம்.
குறிப்பு: கோல்டை அப்படி எடுத்திருக்கலாம்... இப்படி எடுத்திருக்கலாம் என்று சொல்லாதீர்கள். ஏன்னா... நானும் கோல்டு படம் எடுக்கிறது இதுவே முதல் முறை. உங்களுக்கு முன்னாடியே கோல்டு படம் பண்ணும் பழக்கம் இருக்குன்னா நீங்க சொல்றது சரிதான்.