மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஆரம்பக்கட்டப்பணிகளைத் தொடங்கியுள்ளதாக அவருடைய மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பிறகு நுரையீரல், இதயம் பாதிப்படைந்ததால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் பாடகர் எஸ்.பி.பி. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்.பி.பி.யின் பண்ணைத் தோட்டத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று எஸ்.பி.பி.யின் முதலாம் ஆண்டு நினைவு தினம். அவர் சிவன் பக்தர் என்பதால் அவருடைய நினைவிடம் சிவலிங்கம் வடிவத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி.யின் நினைவைப் போற்றும் வகையில் அப்பகுதியில் இசை அஞ்சலி செலுத்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா காலம் என்பதால் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை. எஸ்.பி.பி. நினைவிடத்திற்கு இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐதராபாத்திலிருந்தும் மலர் வளையங்களுடன் வந்த ரசிகர்கள் அனுமதி மறுப்பால் ஏமாற்றத்துடன் வெளியே காத்திருந்து சென்றனர்.
ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த சாந்தி ராஜா என்ற இளைஞர் வித்தியாசமாக எஸ்.பி.பி. பல்வேறு மொழிகளில் பாடிய 425 பாடல்களைத் துண்டுச்சீட்டில் எழுதி அதனைச் சட்டையில் ஒட்டி அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி சரண் கூறியதாவது:
கரோனா காலம் என்பதால் அப்பா நினைவிடத்திற்கு வந்து மக்கள் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இதற்காக பொதுமக்கள், ஊடங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று நீண்ட நாள் கழித்து என் அம்மா வெளியே வந்தார். அப்பாவுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருக்கவேண்டும். இது முக்கிய விஷயம். இங்கு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளோம். அது பெரிய வேலை. நிறைய செலவு ஆகும். அதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அருங்காட்சி, அரங்குகளும் கட்டத் திட்டமிட்டுள்ளோம். இவை ஓராண்டுக்குள் முடிகிற வேலையல்ல. வரைபடம் எல்லாம் தயாரான பிறகு, அரசிடம் சென்று மணிமண்டபம் கட்ட உதவுமாறு கோரிக்கை வைப்பேன் என்றார்.