கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குநர் வசந்தபாலன் அடுத்த வாரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ், அபர்னதி நடிப்பில் ஜெயில் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். ஜெயில் படம் விரைவில் வெளிவரவுள்ளது. தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குகிறார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தபாலன், தன்னுடைய நிலை பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது:
கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
மிகக் கடினமான காலக்கட்டம்.
மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி என் நோய்த் தீவிரம் அடைந்தது.
இடையறாது நாலாபக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால், நண்பர்களின் முயற்சியால், பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால், செவிலியர்களின் கூர்மையான அக்கறையால், மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாக கடந்தேன்.
இலக்கியமும் வாசிப்பும் மனசோர்வின்றி எனை இலவம்பஞ்சைப் போல மிதக்க வைத்தது.
இருபது நாட்கள் கடந்து விட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன்.
அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் என் குருநாதர்களும் சக இயக்குநர்களும் திரையுலக நண்பர்களும் முகமறியா முகப்புத்தக நண்பர்களும்
இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன்.
அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம். மீண்டு(ம்) வாழ வருகிறேன் என்றார்.