புகழ்பெற்ற வங்காள இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா காலமானார். அவருக்கு வயது 77.
சிறந்த படத்துக்கான தேசிய விருதுகளை ஐந்து முறையும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுகளை இரு முறையும் வென்றுள்ளார் புத்ததேவ் தாஸ்குப்தா. இவர் முதலில் இயக்கிய தூரத்வா என்கிற படம் 1978-ல் வெளிவந்தது. கடைசியாக 2018-ல் இவர் படம் இயக்கினார். புத்ததேவ் தாஸ்குப்தா, அபர்ணா சென், கெளதம் கோஸ் போன்றோர் 1980, 1990களில் வங்காளத் திரைத்துறையில் நிலவிய புதிய அலையின் முக்கிய இயக்குநர்களாக விளங்கினார்கள். கவிதைத் தொகுப்புகளையும் புத்ததேவ் தாஸ்குப்தா வெளியிட்டுள்ளார்.
சமீபமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட புத்ததேவ் தாஸ்குப்தா, சிகிச்சை பலனின்றி கொல்கத்தாவில் காலமானார்.
புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.