ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்குத் தடை கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர் கோலி, நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொழுதுபோக்குக்காக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டைப் பணத்துக்காக விளையாடும் சூதாட்டமாக, பல நிறுவனங்கள் தற்போது மாற்றிவிட்டன. இந்தச் சூதாட்ட விளையாட்டில் இளைஞா்கள் பலா் பணத்தை இழப்பதோடு மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்கின்றனா். இந்த நிலையை உணா்ந்த தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிஸா, மகாராஷ்டிரம், ஆந்திரம், நாகலாந்து உள்ளிட்ட மாநில அரசுகள், இந்த விளையாட்டை தடை செய்துள்ளன.
பிற மாநிலங்களைப் போல கேரளாவிலும் இணையவழி ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் கொச்சியைச் சேர்ந்த பாலி வடக்கன் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத் தூதர்களான கிரிக்கெட் வீரர் கோலி, நடிகை தமன்னா, நடிகர் அஜூ வர்க்கீஸ் ஆகியோர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.