தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அதற்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்றும் இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.
2007-ல் கூடல் நகர் என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் சீனு ராமசாமி. அவர் அடுத்து இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் என சீனு ராமசாமி இயக்கிய நான்கு படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய இரு படங்களும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவவேண்டும். அவசரம் என ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநரான சீனு ராமசாமி இதுபோல ட்வீட் செய்துள்ளது தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 தொடர்பாகத் தன்னுடைய கருத்துகளை சீனு ராமசாமி வெளிப்படுத்தியதால் அதன் விளைவாகப் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.