பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது எவிக்சன் பாஸைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார் பாடகர் ஆஜீத்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது.
முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிறகு பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார்.
2-வது வாரம், வெளியேறவுள்ளவர்களின் பட்டியலில் ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியல்லா, ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் என ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் மக்களின் குறைவான வாக்குகள் நடிகைகள் ரேகா, சனம் ஷெட்டிக்குக் கிடைத்தன. மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்ற மூத்த நடிகை ரேகா, இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.
3-வது வாரம், வெளியேறவுள்ளவர்களின் பட்டியலில் ஆஜீத், ஆரி, அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி என ஐந்து பேர் இடம்பெற்றார்கள். இதில் மக்களின் குறைவான வாக்குகள் பாடகர் ஆஜீத்துக்குக் கிடைத்தன. எனினும் ஏற்கெனவே ஒரு போட்டியில் வென்று எவிக்சன் பாஸ் என்கிற பரிசை அவர் பெற்றிருந்ததால் அதைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். இதனால் ஒருவரும் வெளியேற்றப்படாமல் அதே போட்டியாளர்கள் இந்த வாரமும் தொடர்கிறார்கள்.