தனது உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் கவுண்டமணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான 82 வயது கவுண்டமணி பற்றி சில தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அவர் உடல்நலக்குறைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியானதால் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் கவுண்டமணி தனது வழக்கறிஞர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தாம் நலமோடு தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாகவும் யூடியூப் சேனல்களில் வெளியான வதந்திகளால் நிம்மதி கெடுவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்டமணியின் மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யூடியூபில் நடிகர் கவுண்டமணியைப் பற்றி வதந்தீயைக் கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இது போல் தவறான செய்தியைப் பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். யூடியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.