அக்டோபர் 22 அன்று சமூகவலைத்தளங்களில் மீண்டும் இணையவுள்ளார் பிரபல நடிகர் சிம்பு.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் சுசீந்திரன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் அக்டோபர் 22 அன்று சமூகவலைத்தளங்களில் அவர் மீண்டும் இணையவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், ட்விட்டர், யூடியூப் ஆகிய அனைத்து சமூகவலைத்தளங்களிலும் புதிய உற்சாகத்துடன் மீண்டும் அவர் இணைகிறார்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு சமூகவலைத்தளங்களுக்குத் திரும்பும் சிம்பு, கடந்த 2017, ஆகஸ்ட் 15 அன்று சமூகவலைத்தளங்களை விட்டு விலகினார். இதற்கு அவர் சொன்ன காரணம்:
சமூக ஊடங்களில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் பங்கு வகிக்க எனக்குப் பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். நான் என் மனம் சொல்வதைக் கேட்கிறேன். சமூகவலைத்தளங்களில் இருந்து விலகும் முன்பு சொல்ல விரும்புவது இதுதான். எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள் என்றார் சிம்பு.
சிம்பு சொன்ன காரணங்கள் தற்போதும் நீடித்தாலும் படத்தின் விளம்பரங்களுக்கும் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சமூகவலைத்தளங்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால் அவர் மீண்டும் இதில் இணையவுள்ளார்.