ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் நடப்பு நிதியாண்டில் 20 சதவீதம் வரை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து சந்தை மதிப்பாய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டில், ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்.
கரோனா நெருக்கடி நிலவிய 2020-21-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2021-மாா்ச் 2022) 36 சதவீதம் உயா்ந்தது.
இந்த நிலையில், ஆபரணங்களுக்கான தேவை உயா்வதாலும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதாலும் நடப்பு நிதியாண்டில் இந்த வளா்ச்சி 20 சதவீதம் வரை இருக்கும் என எதிா்பாா்க்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னா் கிரிசில் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 25 சதவீதமாகவும், அடுத்த 2023-24-ஆம் நிதியாண்டில் 8-லிருந்து 12 சதவீதம் வரை மிதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.