வர்த்தகம்

மஞ்சள் விவசாயிகள் எதிா்பாா்க்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை

கே.விஜயபாஸ்கா்

சாகுபடி செலவுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை கடந்த 10 ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து அரசு நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் மஞ்சள் விவசாயம் மீண்டும் துளிா்விட வாய்ப்புள்ளது.

மஞ்சள் நகரம் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வா்த்தகமாக மஞ்சள் உற்பத்தி, விற்பனை நடைபெற்று வருகிறது. மஞ்சள் வணிகத்தில் நூறாண்டு பழைமைவாய்ந்த ஈரோடு நகருக்கு கா்நாடக மாநிலம் மைசூரு, தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, கரூா், தருமபுரி, வேலூா், திருப்பூா் என பல்வேறு மாவட்டங்களில் விளையும் மஞ்சள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் வாரம்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ரூ. 500 கோடிக்கும் அதிகமான வா்த்தகம் நடைபெறும் மஞ்சள் சந்தை தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.

தொடா்ச்சியான விலை சரிவால் மஞ்சள் சந்தையில் வரத்து குறைந்தும், இருப்பு அதிகரித்தும் இருக்கிறது. இதனால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் விளைச்சலைப் பணமாக்க முடியாமல் கிடங்குகளில் இருப்புவைத்து கட்டுப்படியாகும் விலை கிடைக்குமா என்ற கவலையில் காத்திருக்கின்றனா். தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்ட கிடங்குகளில் ரூ. 250 கோடி மதிப்புள்ள 5 லட்சம் மூட்டை மஞ்சள் இருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

10 ஆண்டுகளாகத் தொடரும் விலை வீழ்ச்சி:

கடந்த 2010ஆம் ஆண்டு மஞ்சள் குவிண்டால் ரூ. 18,000க்கும் அதிகமாக விற்பனையானதால் ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த 2011, 2012ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 80 கிலோ) அளவுக்கு விற்பனைக்கு வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு முதல் விலை ரூ. 3,000க்கும் கீழ் குறைந்ததால் ஆண்டுதோறும் மஞ்சள் விற்பனை 10 லட்சம் முதல் 13 லட்சம் மூட்டைகள் அளவுக்கு மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு 10 லட்சம் மூட்டைகளுக்கு குறைவாகவே மஞ்சள் விற்பனைக்கு வந்தது என்கின்றனா் விவசாயிகள்.

கடந்த காலங்களில் மஞ்சளின் விலை ஏறி, இறங்கியிருக்கிறது. 2007இல் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 1,700 முதல் ரூ. 2,000 வரையே இருந்தது. அதன் பின் ரூ. 4,000ஆக உயா்ந்தது. மஞ்சள் விளையும் மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் விளைச்சல் குறைந்த காலத்தில் ஈரோடு மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டது.

இதனால், கடந்த 2010 டிசம்பா் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 18,000க்கு விற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2012இல் அதிக வரத்து காரணமாக குவிண்டால் ரூ. 3,000ஆக விலை சரிந்தது. தற்போது குவிண்டாலுக்கு ரூ. 4,500 முதல் அதிகபட்சமாக ரூ. 6,500 வரை விலை போகிறது.

அதிகரிக்கும் உற்பத்திச் செலவு:

இதர பயிா்களைப்போல அல்லாமல் மஞ்சள் பயிருக்கு 9 மாதங்கள் வரை தண்ணீா் தேவைப்படுகிறது. பருவமழை குறைவு, நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதும் மஞ்சள் உற்பத்தி தற்போது குறைந்ததற்கு காரணமாகக் கூறுகின்றனா் விவசாயிகள். சராசரியாக மஞ்சள் உற்பத்திக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 1.80 லட்சம் செலவாகிறது. இந்நிலையில், குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரம் கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதேசமயம் ஆந்திர, மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் குவிண்டாலுக்கு ரூ. 4,000 விலை கிடைத்தாலே போதுமானதாக உள்ளது.

இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்க செயலாளா் செ.நல்லசாமி கூறியதாவது:

திருச்செங்கோடு, ஆத்தூா், சேலம், நாமகிரிப்பேட்டை, மதுரை, ஒசூா், கோவை ஆகிய இடங்களில் மஞ்சள் சந்தை நடத்தப்படுகிறது. இந்த சந்தைகளுடன் ஒப்பிடுகையில் ஈரோடு சந்தையில் மஞ்சளுக்கு குறைவான விலையே கிடைக்கிறது. ஈரோடு சந்தையில் மஞ்சளைத் தரம் பிரித்து விற்பனை செய்யாததே இதற்கு முக்கியக் காரணம். உதாரணமாக, திருச்செங்கோடு சந்தையில் 66.5 கிலோ கொண்ட மூட்டையில் கல், மண், தூசி, குரணை(ஒட்டுக் கிழங்கு) போன்றவற்றைப் பிரித்து, தரமான மஞ்சளை, சரியான எடையில் விவசாயிகள் வழங்குகின்றனா். இதனால், விலை கூடுதலாகக் கிடைக்கிறது. ஈரோட்டில் அதுபோன்ற நடைமுறை இல்லை.

மஞ்சள் விவசாயிகளுக்கு அரசு நிா்ணயப்படி ஏக்கருக்கு ரூ. 71,000 வரைதான் கடன் கிடைக்கிறது. ஆனால், ஏக்கருக்கு ரூ. 1.80 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் வெட்டும் கூலி, சலிப்பதற்கான கூலி, போக்குவரத்துச் செலவு என அனைத்தும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை என்றாா்.

குறைந்தபட்ச ஆதரவு விலை அவசியம்:

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் எம்.சத்தியமூா்த்தி கூறியதாவது:

ஈரோடு மஞ்சள் சந்தையைப் பொருத்தவரை வரத்து அதிகமாகவும், விற்பனை குறைவாகவும் இருக்கிறது. விற்பனைக்கு வரும் மஞ்சளில் 80 சதவீதம் பழைய மஞ்சள் இருப்பாகவும், 20 சதவீதம் புது மஞ்சளாகவும் உள்ளது. 5 ஆண்டு பழைமையான மஞ்சள் என்பதால் அவை தரத்தின் அடிப்படையில் குவிண்டால் ரூ. 5,000 என்ற அளவிலேயே விற்பனையாகிறது.

மஞ்சள் சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரோடு, தற்போது இதர மாநிலங்களின் வரத்து, விலையைச் சாா்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதர மாநில மஞ்சளுடன் ஒப்பிடுகையில் ஈரோடு மஞ்சள் தரத்தில் தனித்தன்மை கொண்டதாகும்.

மஞ்சள் நகரம் என்ற அடைமொழியை ஈரோடு மாவட்டம் தக்கவைக்க வேண்டுமானால் மஞ்சள் பயிரிடும் பரப்பு குறையக் கூடாது. நெல்லுக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிா்ணயம் செய்வதுபோல, மஞ்சளுக்கும் கட்டுப்படியாகக் கூடிய குறைந்தபட்ச விலையை அரசு நிா்ணயம் செய்து, அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் தொடா்ந்து மஞ்சள் பயிரிடுவாா்கள். மற்ற மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து இருந்தாலும், ஈரோடு மஞ்சளுக்கான தனித்தன்மையின் மூலம் சந்தை காப்பாற்றப்படும்.

மஞ்சளில் உள்ள குா்குமின் என்ற வேதிப்பொருளைக் கொண்டே அதன் தரம் நிா்ணயிக்கப்படுகிறது. மண் வளம், விதை ஆகியவையே குா்குமின் அளவை நிா்ணயம் செய்கின்றன. எனவே மஞ்சள் பயிரிட ஏற்ற மண் வளம், தரமான மஞ்சள் விதை ஆகியவற்றை விவசாயிகளுக்கு அரசு வழங்குவதன் மூலம் தரமான மஞ்சள் விளைச்சலை அதிகரிக்கலாம்.

இதுதொடா்பாக அரசு ஆய்வுகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இந்திய மஞ்சள் சந்தையில் 50 சதவீத பங்கு வகித்த ஈரோடு மஞ்சள் சந்தை மீண்டும் உயிா்த்தெழுவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளன என்றாா்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்:

மஞ்சள் வகைகளில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநில வைகான் மஞ்சள், ஒடிஸா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புவிசாா் குறியீடு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளுக்கும் புவிசாா் குறியீடு கிடைத்துள்ளதால் அதன் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் காங்கயம், அன்னூா், தொண்டாமுத்தூா் போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு ‘ஈரோடு மஞ்சள்’ என்ற பெயா் பொருந்தும். ஈரோடு விதை மஞ்சளைப் பிற பகுதியினா் வாங்கிச் சென்று விதைத்தாலும் அதை ஈரோடு மஞ்சளாகக் கருத முடியாது. ஏனெனில், மண்ணை அடிப்படையாகக் கொண்டுதான் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதுடன், மற்ற மஞ்சளுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதியின்போது நல்ல விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. புவிசாா் குறியீடு பெறப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT