மின்சார உற்பத்தி ஆலைகளில் நிலக்கரி கையிருப்பு நவம்பரில் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மக்களவையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதிலும் உள்ள மின் உற்பத்தி ஆலைகளில் நிலக்கரி கையிருப்பானது நவம்பரில் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. அதன்படி, 136 ஆலைகளில் இதன் கையிருப்பு 1.89 கோடி டன்னாக உள்ளது. அந்த ஆலைகள் 9.5 நாள்கள் மின் உற்பத்தியில் ஈடுபட தேவையான அளவாகும் இது.
இந்த 136 ஆலைகளிலும் நிலக்கரி கையிருப்பு கடந்த செப்டம்பரில் 1.03 கோடி டன்னாகவும், அக்டோபரில் 80.7 லட்சம் டன்னாகவும் காணப்பட்டது.
மின் உற்பத்தி ஆலைகளில் நிலக்கரி கையிருப்பை போதுமான அளவில் பராமரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.