புது தில்லி: பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக 4.65 லட்சம் கணக்குகளை முதலீட்டாளர்கள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதிய கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும் அதையெல்லாம் பொருள்படுத்தாமல் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக, கடன் சார்ந்த திட்டங்களில் அவர்களது பங்களிப்பு மிகவும் அதிகமாக காணப்பட்டது.
இதனை எடுத்துக் காட்டும் விதமாக, பரஸ்பர நிதிப் பிறிவில் துறையில் செயல்பட்டு வரும் 45 நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் தொடங்கிய கணக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 9,25,70,743 - ஆக ஏற்றம் கண்டுள்ளது. இந்த கணக்குகளின் எண்ணிக்கை ஜூலை மாத இறுதியில் 9,21,05,737 - ஆக மட்டுமே காணப்பட்டது.
பரஸ்பர நிதி பிரிவில் இணைந்த புதிய முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை ஜூலையில் 5.6 லட்சமாகவும், ஜூனில் 5 லட்சமாகவும், மே மாதத்தில் 6.13 லட்சமாகவும், ஏப்ரலில் 6.82 லட்சமாகவும் இருந்தன.
கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட 4.65 லட்சம் புதிய கணக்குகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் கடன் நிதியம் சார்ந்த திட்டங்களில் தொடங்கப்பட்டவை. பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை ஆகஸ்டில் 34,715 அதிகரித்து 6.38 கோடியைத் தொட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், கடன் திட்டங்களில் தொடங்கப்பட்ட புதிய கணக்குகளின் 2.34 லட்சம் உயர்ந்து 71.2 லட்சம் ஆனது. அதேபோன்று, லிக்யுட் பண்ட்ஸ் திட்டங்களில் கூடுதலாக 61,526 கணக்குகள் தொடங்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.14,500 கோடியை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக பரஸ்பர நிதிய கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.