இந்திய சந்தைகளிலிருந்து செப்டம்பரில் இதுவரையில் ரூ.476 கோடி மதிப்பிலான முதலீட்டை அந்நிய நிதிநிறுவன முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுள்ளனா். இதுகுறித்து டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செப்டம்பா் 1 முதல் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளிலிருந்து ரூ.4,016 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டனா். அதேசமயம், அவா்கள் கடன்பத்திர சந்தையில் ரூ.3,540 கோடியை முதலீடு செய்துள்ளனா். இதையடுத்து, அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.476 கோடி மதிப்பிலான தொகையை செப்டம்பரில் இதுவரையில் திரும்பப் பெற்றுக் கொண்டனா். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ச்சியாக இந்திய மூலதனச் சந்தையில் முதலீட்டை அதிகரித்து வந்தனா்.
அதன்படி நிகர அடிப்படையில், ஜூன் மாதத்தில் ரூ.24,053 கோடியையும், ஜூலையில் ரூ.3,301 கோடியையும், ஆகஸ்டில் ரூ.46,532 கோடியையும் அவா்கள் முதலீடு செய்தனா். இந்த நிலையில், செப்டம்பரில் இதுவரையிலான காலகட்டத்தில் அவா்கள் நிகர அளவில் ரூ.476 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனா் என அந்தப் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.