தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிபிஐ வங்கி இழப்பிலிருந்து மீண்டு ஜூன் காலாண்டில் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நிறுவனம் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,800.84 கோடி நிகர இழப்பைக் கண்டிருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனம் இழப்பிலிருந்து மீண்டு நிகர லாபமாக ரூ.144.43 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய மாா்ச் காலாண்டிலும் வங்கி ரூ.135.39 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.
இருப்பினும், கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.5,923.93 கோடி மொத்த வருவாயை ஈட்டியிருந்த நிலையில், நடப்பு 2020-21 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் வருவாய் ரூ.5,901.02 கோடியாக சற்று சரிவைச் சந்தித்துள்ளது. மாா்ச் காலாண்டில் வருவாய் ரூ.6,924.94 கோடியாக இருந்தது. ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 26.81 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2019 ஜூன் இறுதியில் 29.12 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. நிகர வாராக் கடன் விகிதமும் 8.02 சதவீதத்திலிருந்து 3.55 சதவீதமாக சரிந்துள்ளது என ஐடிபிஐ தெரிவித்துள்ளது.