என் தொழிலில் எப்பொழுது முன்னேற்றம் உண்டாகும்... பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா... எனக்கும், என் மகனுக்கும் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
-சந்திரகாந்தன்,
திருத்துறைப்பூண்டி.
உங்களுக்கு துலாம் லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதி சுக்கிர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான புத பகவானுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிற படியால், சுக்கிர பகவான் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று லாபாதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார்.
சுக பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அங்கு நீச்சம் பெற்றமர்ந்திருக்கும் மூன்று, ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான குருபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.
தனம், வாக்கு, குடும்ப இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் பாக்கியாதிபதியான புத பகவானுடன் இணைந்திருக்கிறார். அனைத்து கிரகங்களும் ராகு, கேது பகவான்களுக்கிடையே அமர்ந்திருப்பதால் இது கால சர்ப்ப யோகமாகும்.
தற்சமயம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து குரு மஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பு. இதில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து உங்கள் தொழில், குடும்பம் இவை அனைத்தும் முன்னேற்றமடைய தொடங்கும். அந்தக் காலகட்டத்தில் ஏழரை சனியில் மூன்றாம் சுற்று முடிவடைந்துவிடும். உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.