நான் பிளஸ்-2 முடித்துவிட்டு அரசு வேலைக்குப் படித்து வருகிறேன். எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்?
-வாசகி, கிருஷ்ணகிரி.
உங்களுக்கு துலாம் லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம், எட்டாமதிபதி சுக்கிர பகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் படிப்பில் சாதனைகள் செய்யும் யோகமுண்டாகும். சுக பூர்வ புண்ணியாதிபதியான சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து தைரிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
ஒன்பதாமதிபதி புத பகவான் லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள பதினொன்றாமதிபதியான சூரிய பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். மூன்று, ஆறாம் வீட்டுக்கதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியையும், ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம் உண்டாகி, செவ்வாய் பகவான் களத்திர காரகராகி குரு பகவானால் பார்க்கப்படுவதும் சிறப்பு), ஒன்பதாம் பார்வையாக ஏழாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார்.
தொழில் ஸ்தானாதிபதி சந்திர பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அரசு கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி பகவான்கள் சிறப்பான சுப பலம் பெற்றிருக்கிறார்கள்.
தற்சமயம் சனி பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.