விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கோயில் திருவிழாவுக்காக கட்டப்பட்டிருந்த அலங்கார மின் விளக்கு கம்பத்தைத் தொட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், பந்தாடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் - தீபா தம்பதியின் மகன் நிதிஷ் (13). இவா், திண்டிவனத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
பந்தாடு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக கிராம வீதிகளில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி வீட்டின் அருகே அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்த இரும்புக் குழாயை நிதிஷ் தெரியாமல் தொட்டாராம். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.