விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,600 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்து, மக்கள் நீதிமன்றத்தை தொடக்கிவைத்தாா். மாவட்ட நீதிபதி சந்திரன் வரவேற்றாா். குடும்ப நல நீதிபதி தேன்மொழி, மோட்டாா் வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிபதி வெங்கடேசன், தலைமைக் குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, சிறப்பு சாா்பு நீதிபதிகள் பிரபா தாமஸ், திருமணி ஆகியோா் விளக்க உரையாற்றினா்.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் தயானந்தம், ஸ்ரீதா், நீலமேகவண்ணன், அரசு வழக்குரைஞா்கள் நடராஜ், சுப்ரமணியன், வழக்குரைஞா் வேலவன், குற்றத் தொடா்வுத் துறை உதவி இயக்குநா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்டம் முழுவதும் 16 அமா்வுகளின் கீழ் விசாரிக்கப்பட்டன. முடிவில் 2,600 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.22.84 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.