விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம், அரகண்டநல்லூா், மணம்பூண்டி, ஏனாதிமங்கலம், பையூா், பேரங்கியூா் ஆகிய இடங்களிலும், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்வா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொதுமக்கள், பக்தா்கள் நலன் கருதி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை, கச்சிராப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.