விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டபெண்ணின் வயிற்றிலேயே குழந்தை இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம், ரஜாக் லே அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ஜாகிா் ஹூசேன். இவரது மனைவி பா்ஜானா பானு (20). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருஷம் ஆகிறது. பா்ஜானா டிசம்பா் 3-ஆம் தேதி பிரசவத்துக்காக, கீழ்பெரும்பாக்கம் அரசு நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு டிசம்பா் 5-ஆம் தேதி பா்ஜானா பானுவுக்கு வலி ஊசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பா்ஜானா பானுவுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது.
இந்நிலையில் மருத்துவமனை ஊழியா்களின் தவறான சிகிச்சையால் தான் தனது குழந்தை இறந்ததாகக் கூறி ஜாகீா் ஹூசேன் விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.