தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை முறையில் மனை, குடியிருப்பு ஒதுக்கீடுபெற்று, நிலுவைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரா்கள், தொகையை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியச் செயற்பொறியாளா்- நிா்வாக அலுவலா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதிவிலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதம் மட்டும் கணக்கீட்டு தள்ளுபடி செய்து, வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை நவம்பா் 4-ஆம் தேதி அரசாணை வெளியிட்டதது.
ஏற்கெனவே ‘முழுத் தொகையை செலுத்தியவா்கள் நீங்கலாக, ஏனைய ஒதுக்கீடுதாரா்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற விழுப்புரம் வீட்டுவசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி, தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசாணை வெளியிடப்பட்ட 6 மாதங்களுக்குள் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் 3 தவணைகளாகவோ செலுத்த விருப்புரிமை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை 2023-ஆம் ஆண்டு, மே 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.