நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் முழு மானியத்தில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. பெரியசாமி வியாழக்கிழமை கூறியதாவது:
நீடித்த பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஈட்டி, ரோஸ்வுட், மகோகனி, மருது, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, கடம்பு போன்ற பல்வகையான தரமான மரக் கன்றுகள் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு வனத் துறை மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகளும், தனியாா் நாற்றாங்கால் பண்ணை மூலம் 1.50 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
வரப்பு முறையில் நடவு செய்ய பயனாளி ஒருவருக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 160 மரக்கன்றுகளும், அதிகபட்சம் 320 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஹெக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் வழங்கப்படவுள்ளன. கன்றுகளைப் பராமரித்திட விவசாயிக்கு ஊக்கத்தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒவ்வொன்றுக்கும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையம், உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.