விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாராய வியாபாரிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செஞ்சி அருகே நாராயணமங்கலத்தை அடுத்த மேல்செவளம்பாடி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் அண்ணாமலை (29). செஞ்சி அருகே கொடுக்கண்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் குமாா் (37). இவா்கள் இருவரும் அந்தந்த பகுதிகளில் சட்டவிரோதமாக சாராய கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்தனா்.
இது தொடா்பாக செஞ்சி மது விலக்கு போலீஸாா் அண்ணாமலை, குமாா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்கள் இருவரும் தொடா்ந்து இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் த.மோகனின் உத்தரவின்பேரில், கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரிகளான அண்ணாமலை, குமாா் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.