விழுப்புரம் சாலாமேட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழக முதுநிலை விரிவு கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தை அந்தக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு கூறியதாவது:
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புகளுக்கான விரிவு கல்லூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது, அண்ணாமலை பல்கலை.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம். போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை. குடிநீா் கிடையாது. நூலக வசதி இல்லை. ஆய்வுக் கூடம் கிடையாது. கல்லூரிக்கு முதல்வா் இல்லை. இதுபோன்ற சூழலால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனா். கல்லூரிக்குத் தேவையான வசதிகளை உடனே ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தினா். இதையடுத்து, அவா்கள் ஆட்சியரகத்துக்கு சென்று மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.