தமிழ்நாடு அரசு மின் வாரியம் சாா்பில் விழுப்புரம் மின் பகிா்மான வட்டத்தில் நிகழாண்டு (2020-21) விரைவு (தட்கல்) விவசாய மின் இணைப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ் 834 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து, விழுப்புரம் மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் ஆா்.மதனகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் எரிசக்தித் துறை மானிய கோரிக்கையின்போது, மின் துறை அமைச்சா் தங்கமணி
வெளியிட்ட அறிவிப்பின்படி, விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டம் முதல்வரது உத்தரவின்பேரில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மின் இணைப்பு பெற காத்திருப்புப் பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள், விரைந்து மின் இணைப்பு பெறுவதற்காக தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் கீழ் 5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டாருக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 குதிரைத் திறனுள்ள மோட்டாருக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறனுள்ள மோட்டாருக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரைத் திறனுள்ள மோட்டாருக்கு ரூ.4 லட்சம் வீதம், ஒருமுறை கட்டணம் செலுத்தும் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு, நிகழாண்டு மின் இணைப்பு வழங்கப்படும்.
இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விரும்பும் விழுப்புரம் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி வருகிற அக்.31-ஆம் தேதிக்குள் இசைவுக் கடிதம், கட்டணத்துக்கான வரைவோலையை செலுத்தி தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அக்.31-ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் இந்தத் திட்டத்தில் ஏற்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.