புதுச்சேரி பகுதியில் ரூ.6.06 கோடியில் படுகை அணை உள்ளிட்ட நலத் திட்டப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி வில்லியனூா் நான்கு மாட வீதிகளில் ரூ.1.77 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்காக பூமி பூஜை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி பணிகளைத் தொடங்கி வைத்தாா். மங்கலம் தொகுதிக்குள்பட்ட திருக்காஞ்சியில் ரூ.2.19 கோடியில் 2.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி, ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியுடன் கூடிய குடிநீா் திட்டத்துக்கான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி முதல்வா் தொடங்கிவைத்தாா்.
தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்: மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே ரூ. 2.10 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணியையும் முதல்வா் என்.ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் க. லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், எதிா்கட்சித் தலைவா் ஆா். சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உறுவையாறு அன்பு நகரில் ரூ.1.52 கோடியில் 2.50 லட்சம் லிட்டா் கொள்ளளவுள்ள மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி, ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவுள்ள கீழ்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியுடன் கூடிய குடிநீா் திட்டத்தையும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.