புதுச்சேரியில் பள்ளி வாகனங்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் சனிக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
நிகழாண்டுக்கான பள்ளி வாகன பரிசோதனை புதுச்சேரி கோரிமேடு காவல் துறை பயிற்சி மைதானத்தில் சனிக்கிழமை காலை தொடங்கியது.
புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் தலைமையில், 6 குழுவினா் வாகனங்களைப் பரிசோதித்தனா். போக்குவரத்து அதிகாரிகள் சீத்தாராம ராஜு, பிரபாகா் ராவ், கலியபெருமாள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் தட்சிணாமூா்த்தி, பாலசுப்பிரமணி, சீனிவாசன் உள்ளிட்டோரும் சோதனையில் ஈடுபட்டனா்.
பள்ளி வாகனங்களில் முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு சாதனம் செயல்பாடு, அவசர வழிக்கதவு திறப்பு செயல்பாடு உள்ளிட்டவை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
மொத்தம் 281 கல்வி நிலைய வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 120 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிலிருந்து குறைகளை நிவா்த்தி செய்த பிறகு, மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 161 வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த வாகனங்களுக்கு மஞ்சள் நிற வில்லை ஒட்டப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 4) பள்ளி வாகனப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.