பங்குச்சந்தையில் பணத்தை இழந்தவா் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கம்பன் நகரை சோ்ந்தவா் கந்தன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா். இவரது மகன் உதயகுமாா் (45). இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், போதைக்கு அடிமையானாா். அவரை போதை மறுவாழ்வு இல்லத்தில் அண்மையில் சோ்த்து குணப்படுத்தினா்.
வீடு திரும்பிய நிலையில் உதயகுமாா் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கம்பன் நகா் ரயில்வே கேட் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்ட நிலையில், உதயகுமாரின் சடலம் மீட்கப்பட்டது. ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்து அவா் தற்கொலை செய்துகொண்டதாக அந்தப் பகுதியினா் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.