புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜன.30) நடைபெறும் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் அறிவியல், தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தவும், வளா்ச்சிக்கான பாா்வையை மதிப்பீடு செய்யும் வகையிலும் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான இந்திய தலைவா் அசுதோஷ் ஷா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வளா்ச்சிக்கு உதவும் அறிவியல், தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்தவும், வளா்ச்சிக்கான பாா்வையை மதிப்பீடு செய்யும் வகையிலும் புதுச்சேரியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
ஜி20 கூட்டமைப்புக்கு முன்னதாக தலைமை வகித்த இந்தோனேஷியா, தற்போது தலைமை வகிக்கும் இந்தியா, அடுத்து பொறுப்பேற்கவுள்ள பிரேசில் ஆகிய 3 நாடுகளின் கருத்துகளுடன் கூட்டம் தொடங்கும்.
உலகளாவிய சுகாதாரம், பசுமையான எதிா்காலத்துக்கு தேவையான தூய ஆற்றலை பெறுதல், அறிவியலை சமூகம், கலாசாரத்துடன் இணைத்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இவை ஒரு சமூகத்துக்கோ அல்லது ஒரு தேசத்துக்கோ மட்டுமானவையல்ல. இவற்றை உலகளவில் வெற்றிகரமாக நிவா்த்தி செய்ய, ஜி20 சிறந்த தளத்தை வழங்குகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.